கருணாநிதி துணையுடன், மக்கள் சக்தியுடன் 2ஜி வழக்கில் வெற்றி பெறுவேன்: ஆ.ராசா

2ஜி வழக்கில் ஜாமீனில் விடுதலையான முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா தனது தொகுதியான நீலகிரிக்கு வந்தார். ஊட்டியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஆ.ராசா பேசியதாவது,
கடந்த 2009ம் ஆண்டு நான் நீலகிரி தொகுதியில் போட்டியிட வந்தபோது அளிக்கப்பட்ட வரவேற்பு போன்று இன்றும் வரவேற்பு அளித்துள்ளீர்கள். நான் மத்திய அமைச்சராக இருக்கையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் என்னால் ரூ.22,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிசி குற்றம்சாட்டியது. மேலும் மத்திய அரசின் தணிக்கைத்துறையோ என்னால் ரூ.1 லட்சத்து 29,000 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறியது.
ஆனால் சிபிஐ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.33,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக என் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. எதிர்கட்சியினரோ நான் ரூ.1 லட்சத்து 76,000 கோடிக்கு ஊழல் செய்துவிட்டேன் என்று அவதூறு பரப்பினர். 2ஜி ஊழல் வழக்கு அனுமான அடிப்படையில் தொடரப்பட்டுள்ளது. எந்தவித அடிப்படை ஆதாரங்கள் இன்றி என் மீது வழ்ககு போடப்பட்டுள்ளது என்று நான் நீதிமன்றத்தில் தெரிவித்தேன்.
இந்த வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி துணையுடன், மக்கள் சக்தியுடன் எனது சட்ட அறிவை வைத்து வெற்றி பெறுவேன். நான் நிரபராதி என்பதை விரைவில் நிரூபிப்பேன். நான் திகாரில் இருந்து புறப்பட்டு சென்னை வரும் வரையில் பல இடங்களில் என்னிடம் பல கேள்விகள் கேட்கப்ப்டடன. ஆனால் நான் இதுவரை எந்த பகுதியிலும் என் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து பேசவில்லை.
என் சொந்த தொகுதி மக்களிடம் தான் இது குறித்து முதன் முறையாக பேசுகிறேன். இனி இதை நாடு முழுவதும் தெரிவிப்பேன். நீலகிரியில் இருந்து நீதிப்பயணம் மேற்கொள்வேன். உங்கள் மீது நான் வைத்துள்ள பாசத்தால் தான் முதலில் என் சொந்த ஊருக்கு கூட போகாமல் உங்களை எல்லாம் பார்க்க வந்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications