கார்களில் கறுப்பு பிலிம்: 10 நாட்களில் 7,000 பேர் மீது வழக்கு, ரூ.6.89 லட்சம் அபராதம் வசூல்
நெல்லை: நெல்லை மாநகரத்தில் கடந்த 10 நாட்களாக போலீசார் நடத்திய சோதனையில் கருப்பு பிலிம் ஒட்டிய 6, 895 கார் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கார் கண்ணாடியில் கருப்பு பிலிம் ஒட்டப்பட்டு பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வந்தன. இதனால் கார்களில் உள்ள கருப்பு பிலிமை அகற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் கார்களில் ஒட்டப்பட்டுள்ள கருப்பு நிற ஸ்டிக்கர்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் போலீசார் கருப்பு பிலிம் ஒட்டிய வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து ஸ்பாட் பைன் ரூ.100 வசூலித்து வருகின்றனர்.
நெல்லையில் போலீஸ் கமிஷனர் கருணாசாகர் உத்தரவின்பேரில் போலீசார் கடந்த 1ம் தேதி முதல் வாகனங்களில் உள்ள கருப்பு பிலிமை அகற்றி ஸ்பாட் பைன் விதித்து வருகின்றனர். மாநகரத்தில் கடந்த 10 நாட்களாக கருப்பு பிலிம் ஒட்டிய 6, 895 கார் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 6 லட்சத்து 89 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டுள்ளது.