தட்டுப்பாட்டை போக்க கூடுதல் மண்ணெண்ணெய் தாருங்கள்: பிரதமருக்கு ஜெ. மீண்டும் கடிதம்
சென்னை: தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை மேலும் உயர்த்தக் கோரி முதல்வர் ஜெயலிலதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடித்தத்தில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தின் ஒரு மாத மண்ணெண்ணெய் தேவை 65,140 கிலோ லிட்டராக உள்ளது. ஆனால் 44,580 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து கடந்த மாதம் 25ம் தேதி தங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். இந்த பிரச்சனை தொடர்பாக தங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி கடிதம் எழுதியிருந்தேன். அதன் பின்பு 14ம் தேதி தங்களை நேரில் சந்தித்தபோது கோரிக்கை மனுவும் அளித்திருந்தேன்.
2011 ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்துக்கு 52, 806 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. இதன் அளவு திடீரென கடந்த ஆண்டு ஜூனில் 44, 580 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டது. அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் இதன் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் தமிழகத்துக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு 39, 429 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழக மக்கள் மிகப்பெரிய அளவுக்கு மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாகவும், குறைந்தபட்சம் அதன் அளவை 52, 806 கிலோ லிட்டராக அதிகரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தேன். இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கான மாதாந்திர ஒதுக்கீட்டின் அளவில் 3,031 கிலோ லிட்டரை அதிகரித்து 42, 460 கிலோ லிட்டராக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
குறைக்கப்பட்ட அளவுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாகும். 52, 806 கிலோ லிட்டரில் இருந்து 39, 429 கிலோ லிட்டராக அதாவது 13,377 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஒரு மாதத்துக்கு விநியோகம் செய்யத் தேவையான மண்ணெண்ணெய் அளவு 65,140 கிலோ லிட்டராகும். எனவே, குறைந்தது 52, 806 கிலோ லிட்டராகவாவது மண்ணெண்ணெய் அளவை உயர்த்த வேண்டும்.
மாநிலத்தில் உள்ள ஏழை மற்றும் சாமானிய மக்கள் படும் வேதனைகளைப் புரிந்து கொண்டு அவர்களின் துயரைத் துடைக்க என்னுடன் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications