சென்னை இளம் கிரிக்கெட் வீரர் தற்கொலை- காரணம் குறித்து போலீசார் விசாரணை!
சென்னை: சென்னையை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கோடம்பாக்கத்தை அடுத்த அக்பராபாத் 2வது தெருவில் உள்ள ஐஸ்வர்யா அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் வசித்து வந்தவர் குமார். இவர் மதுரை தல்லாகுளத்தில் எல்.ஐ.சி அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி சென்னை நுங்கப்பாக்கத்தில் எல்.ஐ.சி அதிகாரியாக உள்ளார்.
இவர்களின் ஒரே மகன் பி.கே.தர்மா(20). மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3வது ஆண்டு மாணவரான தர்மா, வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரராக இருந்தார். எம்.ஆர்.எப் அணிக்காக விளையாடி வந்த தர்மா, சிறந்த வேகபந்து வீச்சாளராக ஜொலித்து வந்தார். இவரது திறமை இந்திய வீரர்களான சச்சின், ஹர்பஜன் சிங் ஆகியோர் வியந்து பாராட்டி உள்ளனர்.
கடந்த வாரம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் தர்மா விளையாடினார். அப்போட்டியில் எம்.ஆர்.எப். அணி தோல்வியை தழுவியதால், தர்மா வருத்தத்துடன் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்றுமுன் தினம் ஓய்வெடுத்த தர்மா பயிற்சிக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
தர்மாவின் தாயும், தந்தையும் பொழிச்சலூரில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த சாவு குறித்து விசாரிக்க சென்றிருந்தனர். இந்த நிலையில் ஐஸ்ஹவுஸில் உள்ள சித்தப்பாவின் வீட்டிற்கு மதிய சாப்பாட்டிற்கு வருவதாக கூறி இருந்த தர்மா, தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த தர்மாவின் பெற்றோர், மகனின் இழப்பை தாங்க முடியாமல் கதறி அழுதனர். இந்திய அணியின் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் ஒருவரை இழந்த சோகத்தில், தர்மாவின் கிரிக்கெட் உலக நண்பர்களும் ஏராளமானோர் வந்து, தர்மாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நேற்று உடலை பெற்று கொண்ட பெற்றோர், இறுதி சடங்குகளை முடித்தனர்.
கடந்த வாரம் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை தாங்க முடியாமல் தர்மா தற்கொலை செய்து கொண்டதாக, அவரது தந்தை போலீசாரிடம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தர்மாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications