நான் என்றுமே உங்கள் தொண்டன், தோழன்: கருணாநிதி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளவராயன் குடிக்காடு கிளைக் கழக திமுக நிர்வாகிகளைப் பாராட்டி அவர்களுக்கு பரிசுகளும், பொற்கிழியும் வழங்கும் விழா காட்டூரில் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளவராயன் குடிக்காட்டில் திமுக சார்பில் நடக்கும் 100வது மாதக் கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களை சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி.
மயிலாடுதுறையில் நடந்த மாநாட்டில் பேசிய நம் தலைவர் அண்ணா கூறுகையில், தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் நம் கிளை இருக்க வேண்டும். கிளைகள் மட்டும் இருந்தால் போதாதது. அந்த கிளைகளுக்கு ஓரளவுக்கு வசதியான சிறிய கட்டிடங்களாவது இருக்க வேண்டும் என்றார்.
ஆயிரம் கிளைக் கழகங்களுடைய சாவிக்கொத்தை என் கையில் கொடுக்க வேண்டும் என்று அண்ணா அன்று சொன்னார். இன்று நம் கழக வளர்ச்சியைப் பார்த்தால் ஆயிரம் என்ன 10,000 சாவிகளைக் கூட கொத்திலே இணைத்து கொடுக்கலாம் போல் இருக்கிறது. கழகத்திற்கு பெரிய தோல்வி ஏற்பட்டுவிட்டதாக யாரும் நினைக்க வேண்டாம். வெற்றி, தோல்வியை சமமாகப் பார்க்கும் வீரனே கழகத்தின் தொண்டன் ஆகும். வெற்றியும், தோல்வியும் ஒன்று தான் என்ற கூற்றுக்கேற்ப இயங்கும் ஒரே இயக்கம் நம் திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
இங்கே கழக நண்பர்களில் சிலருக்கு பரிசுகளும், சிலருக்கு பொற்கிழியும் வழங்கப்பட்டது. அவர்கள் ஒன்றும் அதையெல்லாம் எதிர்பார்த்து பணியாற்றிவில்லை. கழகம் எனக்கு என்ன செய்தது என்றி்ல்லாமல் நான் கழகத்திற்கு என்ன செய்தேன் என்று நினைப்புடன் பணியாற்றுபவர் தான் உண்மையான தொண்டன். அப்பேர்பட்ட கழகத் தோழர்கள் இருக்கும் இடம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
குறிப்பாக தஞ்சை மாவட்டம். அதிலும் குறிப்பாக திருவாரூர் மாவட்டம். திராவிட முன்னேற்றக் கழக தீரர்களின் கோட்டமாக இந்த புள்ளவராயன் குடிக்காடு இருப்பதைப் பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது ஆட்சி மாறிவிட்டது. நான் கடந்த ஆண்டு இங்கு வந்தபோது முதல்வராக வந்தேன். தற்போது முன்னாள் முதல்வராக வந்துள்ளேன். முன்னாள்-இந்நாள் எல்லாம் பதவிக்குத் தான். ஆனால் நான் என்றுமே உங்களுக்கு தொண்டனாக, தோழனாக இருப்பேன் என்ற உறுதியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் பிரச்சனைகளை ஆய்வு செய்து, தேவைகளை உணர்ந்து அவற்றை பூர்ததி செய்வது திராவிட முன்னேற்றக் கழகம் தான். அதனால் தான் இன்றைக்கும் நீங்கள் என்னை இவ்வளவு உற்சாகமாக வரவேற்கிறீர்கள் என்றார்.












Click it and Unblock the Notifications