குழந்தைகளை வேலை பார்க்க வைத்து பணம் பெறுவது குடும்பத்துக்கே அவமானம்-ஜெ.
சென்னை: குழந்தைள் மூலம் பெறப்படும் வருமானமானது, வீட்டுக்கே அவமானத்தைத் தருவதாகும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி ஜெயலலிதா விடுத்திருந்த செய்தியில்,
உலகெங்கும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை வளர்க்கும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 12-ந் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்' கடை பிடிக்கப்படுகிறது. குழந்தை நலன் பேணும் நெறியிலிருந்து விலகி, அவர்களை பணியில் அமர்த்தும் முறை கொடியது. இந்த நாளில் குழந்தை செல்வத்திற்கு கல்வி செல்வம் வழங்க மறுப்பது மனித நெறிக்கு எதிரானது என்பதனை அனைவரும் உணர வேண்டும்.
பெற்றோர் உழைப்பு வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை! குழந்தைகள் உழைப்பு நாட்டிற்கு சிறுமை! ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு, உடல் ஆரோக்கியம், குழந்தை பருவத்தை அனுபவித்தல் ஆகியவற்றை அளித்தாக வேண்டும். அனைத்து குழந்தைகளையும் மதிப்புள்ளவர்களாக மாற்றி அவர்களை சமுதாயத்தின் சொத்தாக காக்க வேண்டும் என்பதே எனது தலைமையிலான தமிழக அரசின் உயரிய உன்னத நோக்கமாகும்.
குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் தமிழகம், இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. குழந்தைகள் சுதந்திரமாக கல்வி கற்றிடவும், பெற்றோர்களின் சுமைகளைக் குறைத்திடவும், கட்டணமில்லா கல்வி, சத்தான சத்துணவு, விலையில்லா மடிக்கணினி, சீருடைகள், பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், மிதி வண்டிகள், காலணிகள், புத்தகப் பை, கணித உபகரண பெட்டி, வண்ண பென்சில்கள், புவியியல் வரைபட புத்தகம், ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு வசதி, கல்வி பயிலுதலில் இடை நிற்றலை குறைக்க ஊக்கத்தொகைகள் ஆகிய எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
குழந்தைகள் மூலம் பெறப்படும் வருமானம், வீட்டுக்கு அவமானம்' என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளில் அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளின் உரிமைகளை மதிப்பதோடு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்பமாட்டோம் என உறுதிபூண்டு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து குழந்தை நேய மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட நம் கடமையை ஆற்றிடுவோம் என்று அவர் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications