கண்ணாமூச்சியாடும் குற்றால சீசன்: வியாபாரிகள் கவலை
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் சீசன் துவங்குவது வழக்கம். இந்த ஆண்டும் அதே போன்று கடந்த 7ம் தேதி சீசன் அதிரடியாகத் துவங்கியது. ஆனால் அன்று ஒரு நாள் மட்டும் ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் கொட்டியது. மறுநாளே சாரல் இல்லாமல் போய்விட்டது. மெயினருவியில் பாறையை ஒட்டியது போல் தண்ணீர் கசிய மட்டுமே செய்கிறது.
பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றில் இன்னும் ஒரு சொட்டு தண்ணீர் கூட விழவில்லை. கிட்டத்தட்ட ஜூன் மாதத்தில் 15 தினங்கள் கழிந்து விட்ட நிலையில் சீசன் ஒட்டு மொத்தமாக சுற்றுலாப் பயணிகளை மட்டுமில்லாமல் வியாபாரிகளையும் ஏமாற்றிவிட்டது. கடந்த ஆண்டு மே மாதமே சீசன் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. கோடை விடுமுறை மட்டுமல்லாது, சமச்சீர் கல்வி பிரச்சனை தொடர்பாக பள்ளி விடு்முறை மேலும் நீட்டிக்கப்பட்டதால் மே 15 முதல் ஜூன் 15 வரையுள்ள ஒரு மாத காலகட்டம் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. இதனால் குற்றாலத்தில் தற்காலிக கடை அமைத்திருந்தவர்கள் உள்பட அனைத்து வியாபாரங்களும் நன்றாக நடந்தது. குற்றாலம் சுற்றுலாத் துறை படகு குழாமில் மட்டுமே ரூ. 2 லட்சம் வசூலானது.
கடந்த ஆண்டை கணக்கிட்டு இந்த ஆண்டு வியாபாரிகள் அதிக வாடகைக்கும், ஏலத்திலும் கடைகள், விடுதிகளை எடுத்தனர். தற்போது சீசன் கண்ணாமூச்சி ஆடுவதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.