2ஜி ஊழல்: சிங்கப்பூரில் முக்கிய தகவல் பெற்ற சிபிஐ!
டெல்லி: 2ஜி ஊழல் குறித்து விசாரிக்க சிங்கப்பூர் சென்ற சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு குழுவினர் அங்குள்ள அதிகாரிகளிடம் இருந்து சில முக்கியத் தகவல்களைப் பெற்றுள்ளனர்.
2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்த சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் அடங்கிய குழு கடந்த வாரம் சிங்கப்பூர் சென்றது. ஆ.ராசா தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருக்கையில் 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது ஆதாயம் பெற்ற சில சிங்கப்பூர் நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்தியது. மேலும் இது குறித்து சிங்கப்பூர் அதிகாரிகளை அந்த குழு சந்தித்து பேசியது. அப்போது அவர்களுக்கு இந்த வழக்கு தொடர்பாக சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.
அந்த தகவல்கள் அடங்கிய ஆவணங்களை சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலிடம் அனுமதி வாங்கி இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதையடுத்து அந்த குழு கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா திரும்பியது. அந்த ஆவணங்கள் விரைவில் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஆ.ராசா தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். ராசா உள்ளிட்டோர் மீது சிபிஐ 2 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications