“நான் அமைச்சராவது இறைவன் சித்தம்".. லீமா ரோஸ் மார்ட்டின் சொன்ன பதில்.. மிரளும் தவெக!
சென்னை: ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தரப்பு அதிமுக இடம்பெற உள்ளதாக தகவல்கள் பரபரத்து வரும் நிலையில் அதுபற்றி பேசியுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் மார்ட்டின். நீங்கள் அமைச்சர் ஆவீர்களா என்ற கேள்விக்கு அவர் கொடுத்துள்ள பதில் தான் ஹைலைட்.
புதுச்சேரி முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றுள்ளார். புதுச்சேரி சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் இன்று எம்.எல்.ஏவாகப் பதவியேற்றார். இந்த நிகழ்வில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் பங்கேற்றார்.

அதைத்தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் அவரது மகனும், ல.ஜ.க. தலைவருமான ஜோஸ் மார்ட்டின் எம்.எல்.ஏ குடும்பத்துடன் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து இன்று வாழ்த்து தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து, லீமா ரோஸ் மார்ட்டின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எனது மகன் எம்எல்ஏ ஆனது சந்தோஷம். அவர் அமைச்சராவது பற்றி சொல்வார்கள். மக்களுக்கு நல்லது செய்ய எங்கள் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்துள்ளோம்" என்றார்.
அப்போது அவரிடம், தவெக ஆட்சியில் நீங்கள் அமைச்சர் ஆவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த லீமா ரோஸ் மார்ட்டின், "இறைவனின் சித்தம்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "தவெக அமைச்சரவையில் நாங்கள் 8 அமைச்சர் பதவிகளை கோரியுள்ளதாக தவறாக யூடியூப்பில் போடுகிறார்கள். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவதூறாக பேசுவோர் மீது நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் உள்ளோம்" என்றார்.
மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார். விளையாட்டுத்துறை, பொதுப்பணித்துறை ஆகிய முக்கிய துறைகள் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் ரங்கசாமி அமைச்சரவையில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தவெக அமைச்சரவையில் எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தரப்பைச் சேர்ந்த சிலர் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் சிறகடிக்கின்றன.
அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சரவையில் இடம்பெறும் பட்சத்தில், மார்ட்டினின் மனைவி லீமா ரோஸும் இடம்பெறக்கூடும் என்ற தகவல்கள் பரபரக்கின்றன. இதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில் தான், அதுபற்றிய யூகங்கள் குறித்த கேள்விக்கு 'இறைவனின் சித்தம்' என பதில் அளித்துள்ளார் லீமாரோஸ் மார்ட்டின்.
இதற்கிடையே, லீமா ரோஸ் மார்ட்டினை வாழ்த்தி, சீர்காழி நகரம் முழுவதும் பிரமாண்டமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சீர்காழி நகரின் முக்கிய இடங்களில் எல்லாம் வெள்ளியங்கிரி புருஷோத்தமன் என்பவரின் பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
"வறுமையை ஒழிக்க வந்த தாயே! மக்கள் வெள்ளமே! புதிய விடி வெள்ளியே! ஏழைகளின் தலைவியே!!" "தமிழகத்தின் எதிர்காலமே!! எங்கள் அம்மா மார்ட்டின் லீமா ரோஸ் அவர்களை வாழ்த்துகின்றோம்..." என்ற அதிரடியான வாசகங்கள் அந்தப் போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications