"வீடு, கார் எதுவும் சந்தோஷம் தராது!" வாழ்க்கை நிம்மதிக்கான ரகசியத்தை சொன்ன செல்வராகவன்! ரசிகர்கள் உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் செல்வராகவன், படங்கள் மூலம் மட்டுமல்லாமல் சமீபகாலமாக தனது வாழ்க்கை அனுபவங்களை பகிரும் வீடியோக்கள் மூலமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அவர் வெளியிடும் சில வீடியோக்கள் நேரடியாக மனதைத் தொட்டுவிடுவதால், ரசிகர்கள் அவற்றை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது செல்வராகவன் வெளியிட்டிருக்கும் புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், "உண்மையான சந்தோஷம் எதில் இருக்கிறது தெரியுமா?" என்று கேட்டு வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இயக்குனர் செல்வராகவன் வீடியோ
அவர் பேசும்போது, பொதுவாக எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு ஆசை இருக்கும். சின்னதாக ஒரு இடம் வாங்க வேண்டும், அதில் நமக்கான வீடு கட்ட வேண்டும், வீட்டுக்கு தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக வாங்க வேண்டும் என்று திட்டமிடுவோம். அந்த ஆசைகள் நிறைவேறும்போது சில நிமிடங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால் அந்த மகிழ்ச்சி நிரந்தரமில்லை. அதற்குப் பிறகு அதனுடன் சேர்ந்து புதிய பிரச்சனைகளும், கவலைகளும் வரத்தான் செய்யும் என்று கூறியுள்ளார்.
உண்மையான சந்தோஷம்
உண்மையான சந்தோஷம் எங்கே இருக்கிறது என்றால் அது குடும்பத்துக்குள் தான், குறிப்பாக குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தில் தான் என்று செல்வராகவன் தெரிவித்துள்ளார். "எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் குழந்தைகளுடன் கொஞ்ச நேரம் விளையாடி பாருங்கள்.
அவர்களுடைய உலகத்திற்குள் நுழைந்து விட்டால் நம்முடைய பிரச்சனைகள் கொஞ்ச நேரத்துக்கு மறைந்து போய்விடும். குழந்தைகளுக்கும் நமக்கும் உள்ள பந்தம் இன்னும் ஆழமாகும். உலகமே வேற மாதிரி தெரியும்" என்று அவர் கூறியிருக்கிறார்.
கணவன் மனைவி உறவுக்கு தேவையானது
அதோடு கணவன்-மனைவி உறவையும் பற்றி பேசிய செல்வராகவன், "மனைவியுடன் மனம் திறந்து பேச வேண்டும். ஆனால் பெரும்பாலும் வீட்டுக் கணக்கு, செலவு, பொறுப்பு போன்ற விஷயங்கள்தான் பேசப்படுகின்றன. அதற்கு அப்பாற்பட்டு அவர்களுக்கு என்ன பிடிக்கும், என்ன புத்தகம் படிப்பார்கள், என்ன விஷயங்களில் ஆர்வம் இருக்கிறது என்று கேட்டு பேச வேண்டும். அப்படி மனம் திறந்து பேசினால் உறவில் வேற மாதிரியான நெருக்கம் உருவாகும்" என்று தெரிவித்துள்ளார்.
இயந்திரமயமான வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருந்தால் மன அழுத்தம் மட்டும் தான் அதிகரிக்கும். ஆனால் குடும்பத்துடன் உண்மையாக நேரம் செலவிட்டால் வாழ்க்கையே சொர்க்கமாக மாறிவிடும். நிலைத்தன்மை இல்லாத வெளிப்புற விஷயங்களில் நிம்மதியை தேடினால் அது கிடைக்காது என்றும் அவர் தத்துவமாக பேசியிருக்கிறார்.
ரசிகர்கள் வேண்டுகோள்
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் உணர்ச்சிபூர்வமான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். "தலைவா... நீங்க படம் எடுப்பதை விட இதுபோல பேசுற வீடியோக்கள் ரொம்ப தேவை", "மனசுக்கு செம்ம ஆறுதல்", "உங்க வீடியோ கேட்டா மன அழுத்தம் குறையுது", "ஒரு இயக்குநர் மட்டும் இல்ல, வாழ்க்கை சொல்லித் தரும் ஆசிரியர் மாதிரி பேசுறீங்க" என்று பாராட்டி வருகின்றனர்.
சமீபகாலமாக செல்வராகவன் இப்படியான வாழ்க்கை அனுபவ வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதனால் அவரது ரசிகர்கள், "செல்வராகவனின் அடுத்த படம் எப்போன்னு கேட்குறதுக்கு முன்னாடி... அடுத்த தத்துவ வீடியோ எப்போ?" என்று காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர்.














Click it and Unblock the Notifications