பண்ணை வீடு, ஸ்கார்பியோ கார்! ராமர் கோயில் திருட்டு வழக்கில் கைதான நபரின் ஆடம்பர வாழ்க்கை!
லக்னோ: அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களின் காணிக்கையை திருடிய வழக்கில், வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் திடீர் வாழ்க்கை மாற்றத்தைக் கண்டு போலீஸார் வியப்படைந்துள்ளனர்.
திருட்டுச் சம்பவத்திற்குப் பிறகு, அந்த நபர் பண்ணை வீடு மற்றும் ஸ்கார்பியோ கார் வாங்கும் அளவிற்குப் பெரும் பணக்காரராக மாறியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்காலிக ஊழியராக
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் அனுகல்ப் மிஸ்ரா என்கிற நபரைக் கைது செய்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இவர் காணிக்கையை எண்ணுவதற்காக, அவுட்சோர்சிங் ஏஜென்சி மூலம் தற்காலிக ஊழியராக வேலைக்கு சேர்க்கப்பட்டிருந்தார். இப்படி சேந்த இவர், காணிக்கை திருட்டின் மூளையாக செயல்பட்டிருக்கிறார். ருசி கண்ட பூனை சும்மா இருக்காது என்பது போல.. கொஞ்ச நாட்களிலேயே இவர் தன்னுடைய மச்சான் லவகுஷ் மிஸ்ராவை காணிக்கை எண்ணும் அதே டீமில் ரெகமண்ட் செய்து சேர்த்திருக்கிறார்.
திடீர் வளர்ச்சி
இப்படி இந்த வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே இருவரின் சொத்து மதிப்பும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக ஆடம்பர வாழ்க்கையை இவர்கள் வாழ தொடங்கியிருக்கின்றனர். இவர்களது சொந்த ஊரான பசாவா கிராமத்திற்கு சென்று போலீசார் விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கிராமத்தில் இருந்த வீடுகளை விட, அனுகல்ப் வீடு பிரமாண்டமானதாக கட்டப்பட்டிருக்கிறது. அதேபோல.. ஊருக்கு ஒதுக்குபுறமாக பண்ணை வீட்டையும் கட்டியிருக்கிறார். மட்டுமல்லாது அயோத்தியில் ரூ.65 லட்சத்தில் சொகுசு வீட்டையும் வாங்கியிருக்கிறார். மேலும் புது ஸ்கார்பியோ காரை வாங்க திட்டமிட்டிருந்திருக்கிறார்.
மச்சானின் திடீர் வளர்ச்சி
அனுகல்ப் தனது ரெகமண்டில் வேலைக்கு சேர்த்திருந்த அவரது மச்சானும் சொகுசாக வாழ தொடங்கியிருக்கிறார். வாடகை வீட்டில் வசித்து வந்த மச்சான் லவகுஷ், ரூ.1 லட்சத்திற்கும் அதிக மதிப்பு கொண்ட புது பைக்கை வாங்கியிருக்கிறார். இதெல்லாம்தான் போலீசுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
போலீஸ் தரப்பு தகவல்
இது குறித்து போலீஸ் கூறுகையில், "சம்பந்தப்பட்ட நபர் திருடிய பணத்தைக் கொண்டு தனது வாழ்வாதாரத்தை முழுமையாக மாற்றியுள்ளார். அவரது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்து விவரங்களை ஆய்வு செய்தபோது, திருட்டு நடந்த காலத்திற்குப் பிறகு அவர் பெரும் தொகையைச் செலவழித்திருப்பது உறுதியானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சில முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்துக்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தத் திருட்டில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ராமர் கோயில் தொடர்பான இந்தத் திருட்டுச் சம்பவம் மற்றும் குற்றவாளியின் ஆடம்பர வாழ்க்கை குறித்த தகவல்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.














Click it and Unblock the Notifications