பெட்ரோல்.. தங்கம்! நான் சொன்னதை செய்ததற்கு நன்றி.. கையெடுத்து கும்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லி: மேற்காசிய நாடுகளில் நீடித்து வரும் பதற்றமான சூழல் உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், தங்கம் வாங்குவதைத் தற்காலிகமாக ஒத்திவைக்கவும், தேவையற்ற வெளிநாட்டு பயணங்களைத் தவிர்க்க வேண்டுமென கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்நிலையில், தான் விடுத்திருந்த வேண்டுகோளுக்கு மக்கள் அளித்த ஒத்துழைப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே தொடர்ந்து உரையாற்றி வருகிறார். அந்த வகையில் ஜுன் மாதத்தில் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் மூலம் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்," உலகளவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாக்க மக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.

சில வாரங்களுக்கு முன்பு, எரிபொருள் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்க வேண்டும், அவசியமற்ற தங்க வாங்குதலை தள்ளிவைக்க வேண்டும், தேவையற்ற வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வேண்டுகோளுக்கு நாடு முழுவதும் மக்கள் நல்ல வரவேற்பு அளித்திருப்பதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். பல்வேறு மாநிலங்களில் ஒரே இடத்திற்குச் செல்லும் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கார் பகிர்வு முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார்.
இதன் மூலம் எரிபொருள் செலவு மட்டுமின்றி, போக்குவரத்து நெரிசலும் குறைவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோல், திருமணங்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்காக புதிய தங்க நகைகளை வாங்குவதற்குப் பதிலாக, வீட்டில் இருக்கும் பழைய தங்க நகைகளை உருக்கி மறுவடிவமைத்து பயன்படுத்தும் நடைமுறையும் அதிகரித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இதுபோன்ற நடவடிக்கைகள் தனிநபர் செலவைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் தங்க இறக்குமதி சுமையையும் குறைக்க உதவும் என்றார்.
தேவையற்ற வெளிநாட்டு சுற்றுலா மற்றும் பிற பயணங்களை ஒத்திவைப்பதன் மூலமும் வெளிநாட்டு செலாவணி சேமிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய உலகச் சூழலில் ஒவ்வொரு குடிமகனின் பொறுப்புணர்வும் நாட்டின் பொருளாதார வலிமையை அதிகரிக்கும் முக்கிய அம்சமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
"நாட்டின் நலனுக்காக மக்கள் தன்னார்வத்துடன் எடுத்துள்ள இந்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை. அரசின் முயற்சிகளுக்கு மக்கள் அளிக்கும் ஒத்துழைப்பே இந்தியாவின் மிகப்பெரிய பலமாகும். சிறிய சிறிய மாற்றங்களும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பெரிய பங்களிப்பாக மாறும்," என்று பிரதமர் தெரிவித்தார்.














Click it and Unblock the Notifications