கரம் மசாலாவை ஹெராயின் என்று சொன்ன மெஷின்.. பிரபல தொழிலதிபருக்கு சிறைவாசம்! ரொம்ப பாவம்
போபால்: பொதுவாக விமான நிலையங்களில் எப்போதும் உச்சபட்சப் பாதுகாப்பு இருக்கும். ஆனால், சில நேரங்களில் இதுபோன்ற பாதுகாப்பு சோதனைகளில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு சாமானியர்களின் வாழ்க்கையைக் கடுமையாகப் பாதிக்கிறது. அப்படித் தான் மசாலா பொருட்களை எடுத்து வந்த நபரைப் போதைப் பொருள் எடுத்து வந்ததாகச் சொல்லி சுமார் 2 மாதங்கள் சிறையில் அடைத்துள்ளனர். இப்போது நீதிமன்றம் தலையிடும் அளவுக்கு நிலைமை போய் இருக்கிறது.
உலகெங்கும் எப்போதும் விமான நிலையங்களில் உச்சபட்சப் பாதுகாப்பு இருக்கும். நாம் எடுத்துச் செல்லும் அனைத்துப் பொருட்களையும் மிகத் தீவிரமாகச் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிப்பார்கள். ஆனால், இந்தச் சோதனைகளிலும் கூட சில சமயம் குளறுபடி நடந்த மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுவிடும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

தொழிலதிபர்
மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலையத்திலிருந்து டெல்லிக்குச் செல்வதற்காகத் தொழிலதிபர் அஜய் சிங் என்பவர் தனது லக்கேஜ்களுடன் வந்துள்ளார். அங்கிருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் நடத்திய வழக்கமான ஸ்கிரீனிங் சோதனையின் போதுதான் அந்தக் குளறுபடி நடந்துள்ளது. அஜய் சிங்கின் பையிலிருந்த பிராண்டட் மசாலா பாக்கெட்டுகளை அங்கிருந்த எக்ஸ்புளோசிவ் டிரேஸ் டிடெக்டர் என்ற அதிநவீன மெஷின் மூலம் அதிகாரிகள் சோதித்துள்ளனர்.
ஆனால், அந்த மெஷின் ஏதோ விசித்திரமான முடிவுகளைக் காட்டியுள்ளது. அவர் எடுத்து வந்திருந்த மாங்காய் பொடியில் 1% முதல் 4% வரை 'ஹெராயின்' உள்ளதாகக் காட்டியது! மேலும், அவரிடம் இருந்த கரம் மசாலா பொடியில் கிட்டத்தட்ட 10% ரசாயனப் போதைப்பொருள் உள்ளதாகக் காட்டியது! இந்த மிஷின் ரிப்போர்ட்டை மட்டுமே நம்பிய சிஐஎஸ்எஃப் அதிகாரிகள், அஜய் சிங்கை உடனடியாகக் கடத்தல்காரன் என முத்திரை குத்தி காந்தி நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
மசாலா பாக்கெட்
கைதுக்குப் பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட மசாலா பாக்கெட்டுகள் உண்மைத்தன்மையை அறிய மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிராந்தியத் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால், அங்கு தான் மிகப் பெரிய சோகம் அரங்கேறியது. அங்குள்ள லேப் அதிகாரிகள் மாதிரிகளைப் பல நாட்கள் சோதிக்காமல் அப்படியே வைத்துவிட்டனர். சில நாட்கள் கழித்து, "எங்களிடம் இந்தப் போதைப்பொருளைச் சோதிப்பதற்கான போதிய நவீன உபகரணங்கள் இல்லை"** என்று கூறி மாதிரிகளை அப்படியே திருப்பி அனுப்பியுள்ளனர்!
57 நாட்கள் சிறை
இதன் காரணமாக, அந்த மாதிரிகள் மீண்டும் ஹைதராபாத்தில் உள்ள மத்தியத் தடய அறிவியல் ஆய்வகத்திற்குச் சிறப்புச் சோதனைக்காக அனுப்பப்பட்டன. அங்கு நடத்தப்பட்ட இறுதிப் பரிசோதனையில், "அதில் எவ்விதப் போதைப்பொருளும் இல்லை; அது சமையல் மசாலா பொடி தான்" என ரிப்போர்ட் வந்தது. இந்த ரிப்போர்ட் வரும் வரை, அதாவது 57 நாட்கள், எந்தத் தவறும் செய்யாத அஜய் சிங் சிறையில் இருந்தார்.
விசாரணை
இது தொடர்பான வழக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதி தீபக் கோட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டு கோபமடைந்த நீதிபதி சில காட்டமான உத்தரவுகளைப் பிறப்பித்தார். நீதிபதி இந்த வழக்கில், "விமான நிலையங்களில் இருக்கும் ஏடிடி இயந்திரங்கள் வெறும் ஆரம்பக்கட்டச் சந்தேகத்தை மட்டுமே காட்டக்கூடியவை.. அவை இறுதி ஆதாரங்கள் அல்ல. இறுதி தடய அறிவியல் அறிக்கைக்குத் தான் சட்டப்பூர்வ முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.
மாநிலத்தில் ஒரு தரமான மற்றும் நவீன தடய அறிவியல் ஆய்வகம் கூட இல்லாததால், இவர் 57 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். இது அவரது அரசியல் சாசன வாழ்வுரிமையைப் பறிக்கும் செயலாகும். எனவே, அஜய் சிங்கிற்கு ₹10 லட்சம் இழப்பீட்டை மாநில அரசு 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்!" என்று உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications