இடைத் தேர்தலில் முதல் முறையாக டெபாசி்ட்டை தக்க வைத்த தேமுதிக- புதிய வரலாறு!!
இன்று நடந்த புதுக்கோட்டைத் தொகுதி இடைத் தேர்தல் முடிவில், தேமுதிக இரண்டாவது இடத்தைப் பெற்றது. கூடவே டெபாசிட்டையும் தக்க வைத்துக் கொண்டது. திமுக போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதாலும், பிற கட்சிகள் போட்டியிட விருப்பம் இல்லாததாலும்தான் தேமுதிகவுக்கு இந்த உயர்வு கிடைத்துள்ளது.
எனவே இதை பெரிய பெருமையாக எடுத்துக் கொள்ள முடியாத நிலையில்தான் உள்ளது தேமுதிக.
இருப்பினும் இன்றைய வெற்றியில் தேமுதிக பக்கம் சில சுவாரஸ்ய விஷயங்கள் அடங்கியுள்ளன. ஒரு இடைத் தேர்தலில் டெபாசிட்டை திரும்பப் பெற்றது தேமுதிகவைப் பொறுத்தவரை இதுவே முதல் முறையாகும்.
தேமுதிக கட்சி தொடங்கப்பட்டது முதல், அது போட்டியிட்ட இடைத் தேர்தல் எதிலுமே டெபாசிட்டைத் திரும்பப் பெற்றது இல்லை. ஆனால் தற்போதுதான் முதல் முறையாக டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற்றுள்ளார் புதுக்கோட்டையில் போட்டியிட்ட ஜாகிர் உசேன். திமுகவுக்குத்தான் அவர்கள் இதற்காக நன்றி சொல்ல வேண்டும்.
கடந்த திமுக ஆட்சியில் நடந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் விடாமல் தேமுதிக போட்டியிட்டது. அத்தனை இடங்களிலும் டெபாசிட்டைப் பறிகொடுத்தது. அதேபோல தற்போதைய அதிமுக ஆட்சியில் 2வது முறையாக இடைத் தேர்தலில் போட்டியிட்டது. இதில் சங்கரன்கோவிலில்நடந்த தேர்தலில் டெபாசிட் காலியானது. தற்போதைய புதுக்கோட்டை இடைத் தேர்தலில் டெபாசிட்டைத் திரும்பப் பெற்றுள்ளது.