ஜாமீனின்றி ரூ.7.5 லட்சம் வரை கல்விக்கடன்: கொடுப்பார்களா வங்கி மேனேஜர்கள்?

மாணவர்களின் படிப்புக்கு பணம் இடையூறாக இருக்கக் கூடாது என்று மத்திய அரசு கல்விக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் கடன் பெறலாம். அவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியை மட்டும் கட்டிவிட்டு படித்து முடித்த பிறகு ஓராண்டிற்குள் அசல் மற்றும் வட்டியை திரும்பக் கட்ட வேண்டும்.
இந்த திட்டத்தில் குறைந்த வட்டியே வசூலிக்கப்படுகிறது. 10 முதல் 11 சதவீத வட்டி தான் வசூல் செய்யப்படுகிறது. அதிலும் மாணவிகளுக்கு 1/2 சதவீத வட்டி குறைவாகும். தற்போது இத்திட்டத்தின் கீழ் படிக்கும் காலத்தில் வட்டியைக் கட்டத் தேவையில்லை. படித்த முடித்த பிறகு வட்டியையும், அசலையும் கட்டினால் போதும். இந்த திட்டத்தின் கீழ் உள்நாட்டில் படிக்க அதிகபட்சம் ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் படிக்க ரூ.20 லட்சமும் கடனாக வழங்கப்படுகிறது.
கல்விக்கடன் திட்டத்தின் கீழ் ஜாமீன் இன்றி, 3வது நபர் உத்தரவாதமின்றி கடன் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும் வங்கி மேலாளர்கள் ஜாமீன் அல்லது உத்தரவாதம் இன்றி கடன் தர தயாராக இல்லை. இந்நிலையில் ஜாமீன் இன்றி, 3வது நபர் உத்தரவாதம் இன்றி ரூ.7.5 லட்சம் வரை கல்விக்கடன் பெறும் புதிய திட்டம் இந்த ஆண்டு அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தின் செயல்பாட்டை பொருத்து தான் அதன் வெற்றி அமையும்.












Click it and Unblock the Notifications