குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுங்கள்: கலாமை வலியுறுத்திய அத்வானி, மமதா
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாள்ர் பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிட வருமாறு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை பாஜக மூத்த தலைவர் அத்வானி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளனர்.
கலாமை இன்று பிற்பகல் தொடர்பு கொண்டு பேசிய அத்வானி, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தியதுடன் தமது தூதராக சுதீந்திர குல்கர்னியை அனுப்பியிருப்பது பற்றியும் விவரித்துள்ளார். சுதீந்தர குல்கர்னியும் கலாமை இன்று இரண்டு முறை சந்தித்துப் பேசினார்.
இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியும் இன்று அப்துல் கலாமை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். இன்று மாலை தங்களது பெயரை அறிவிக்க உள்ளோம். உங்களது ஒப்புதல் அவசியம் என்று மமதா கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அப்துல் கலாம் தனியாக செய்தியாளர்களை சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் தமது நிலைப்பாடு என்ன என்பதை பற்றி விளக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.