கேரளாவின் கையை வைத்து தமிழகத்தின் கண்ணைக் குத்த இலங்கை சதி?

தமிழகத்திற்கும், கேரளாவுக்கும் இடையே முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பல்வேறு நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகள் உள்ளன. சமீபத்தில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை மிகப் பெரிய அளவில் வெடித்தது. தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக கேரளாவுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் மக்கள் கொந்தளித்தனர். இதை கேரள மக்கள் எதிர்பார்க்கவில்லை.
தமிழகத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சிப் போராட்டத்திற்குப் பின்னரே கேரளா சற்று பணிந்தது. இருப்பினும் நீரு பூத்த நெருப்பாகவே இந்தப் பிரச்சினை இருந்து வருகிறது. இப்போது கூட முல்லைப் பெரியாறு அணையில் ஏற்பட்ட துளைகளை அடைக்க விடாமல் கேரள அரசு இடையூறு செய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்துடன் மோதி வரும் கேரளாவை தன் பக்கம் திருப்பி கேரளாவைக் கொண்டு தமிழகத்தை டென்ஷனாக்க இலங்கை சதித் திட்டம் தீட்டியுள்ளதாக இலங்கை தமிழ் இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்காக கேரளாவுடனான தனது உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ள இலங்கை முயன்று வருகிறதாம்.
இதற்காக இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம் கேரளாவுக்கு சென்று அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்துப் பேசி விட்டு வந்துள்ளார். அங்குள்ள உயர் அரசு அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
கேரளா மற்றும் இலங்கை இடையே வலுவான பொருளாதார உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது குறித்து அவர் பேசியதாக கூறப்படுகிறது.
ஈழத்தில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே.நாராயணன் இருந்தார். வெளியுறவுத்துறை செயலாளராக சிவசங்கர மேனன் இருந்தார். இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அப்போதே அவர்கள் இருவரும் கடும் கண்டனங்களை உலகத் தமிழர்கள் மத்தியில் சம்பாதித்தனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் கேரளாவை வைத்து தமிழகத்தை சோதிக்க இலங்கை அரசு சதி செய்வதாக வெளியாகியுள்ள தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications