நெல்லையில் அரசு பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி மும்முரம்
நெல்லை: நெல்லையில் வரும் 29ம் தேதி் தொடங்க உள்ள அரசு பொருட்காட்சிக்காக அரங்குகள் மற்றும் ஸ்டால்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
நெல்லையப்பர் ஆனி தேரோட்டம் மற்றும் குற்றால சீசனை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி எதிரே உள்ள பொருட்காட்சி மைதானத்தில் அரசு பொருட்காட்சி வருகிற 29ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 45 நாட்கள் நடைபெற உள்ள இந்த பொருட்காட்சியில் காவல்துறை, வருவாய்த்துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கல்வித்துறை, அறநிலையத்துறை, மாநகராட்சி, கூட்டுறவு, சமூக நலத்துறை, பொது சுகாதாரத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்க விதவிதமான நவீன ராட்டினங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், பல்பொருள் விற்பனை அரங்குகள், மற்றும் நாள்தோறும் கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்காக கலையரங்குகள் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. இதற்காக தற்போது அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில் பணி ஆரம்ப கட்டத்தில் உள்ளது. எனவே பணியை விரைவுபடுத்த செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நெல்லையில் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வந்தது. நெல்லை மக்களுக்கு போதிய பொழுதுபோக்கு வசதி இல்லாததால் பொருட்காட்சி நடத்தப்படும் போதேல்லாம் அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. எனவே இந்த ஆண்டு முதல் இனி ஆண்டுதோறும் நெல்லையில் பொருட்காட்சி நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.