உல்லாசமாக இருக்கணும்... பெண்களை எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டிய ஊதாரி இளைஞர் கைது
பெங்களூர்: பெங்களூரைச் சேர்ந்த பல பெண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களது படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி வந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூர் யஷ்வந்தபூர் ராகவேந்திரா காலனியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வருபவர் ஜகனா. இவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், மே 17 ந் தேதி எனது செல்போனுக்கு ராம் என்பவர் எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தார். அதில், அவருடன் நான் ஒருநாள் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் எனது படத்தை ஆபாசமாக சித்தரித்து பிறரின் செல்போனுக்கு எம்.எம்.எஸ். மூலம் அனுப்பி அவமானப்படுத்தி விடுவேன் என்றும் கூறி இருந்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து 28 வயது இளைஞரான அந்த ராமைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்தனர். பீன்யாவில் பதுங்கியிருந்த ராமைப் பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இந்த ராமால் ஒரு பெண்ணின் திருமணமே நின்று போயுள்ளது. கள்ள நோட்டு வழக்கில் முன்பு ஒருமுறை கைதான ராம், இடையில் விவசாயமும் செய்து வந்துள்ளார். ஆனால் சமீபகாலமாக பெண்களுக்கு மிரட்டல் விடுத்து வந்தது தெரிய வந்தது.
7ம் வகுப்பு வரை படித்து உளள ராமுக்கு சொந்த ஊர் கொத்தனகட்டா என்ற கிராமமாகும். 1998ம் ஆண்டு மும்பை போன ராம், ஹோட்டலில் வேலை பார்த்தார். அங்கு சம்பளம் சரியில்லை என்று பெங்களூர் வந்தார். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். பிறகு மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பினார்.
அங்கு கெம்பே கெளடா என்பவருடன் சேர்ந்து கள்ள நோட்டை மாற்ற முயன்று போலீஸில் சிக்கி சிறை சென்றார். சிறையிலிருந்து மீண்ட பின்னர் விவசாயத்திற்கு மாறினார். அதுவும் சரிப்பட்டு வராததால் மறுபடியும் பெங்களூர் வந்தார். ஒரு பீட்சா கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.
அப்போது வீடுகளுக்கு ஆர்டர் சேகரித்தபோது பல பெண்களின் செல்போன் எண்கள் கிடைத்தன. இதை வைத்து குயுக்தியாக யோசித்த ராம், பெண்களுக்கும், இளம் மாணவிகளுக்கும் எஸ்எம்எஸ் மூலம் மிரட்டல் விடுக்க ஆரம்பித்தார். என்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் ஆபாசப் படத்தை போட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட பெண்களை இதுபோல அவர் மிரட்டியுள்ளார். இவரது செய்கையால் ஒரு பெண்ணுக்கு நிச்சயமாகியிருந்த திருமணமே நின்று போய் விட்டதாம்.
போலீஸார் ராமிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரிடமிருந்தும் புகார்களைப் பெற்று கடும் நடவடிக்கை எடுக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.