ரூ.35 லட்சம் கேட்டு பெங்களூரில் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் எம்.பி.யின் மகள் சென்னையில் மீட்பு
பெங்களூர்: பெங்களூரில் கடத்தப்பட்ட கர்நாடாக முன்னாள் எம்.பி. ஹெச்.ஜி. ராமுலுவின் மகள் 12 மணிநேரத்திற்குள் சென்னை ரயில் நிலையத்தில் மீ்ட்கப்பட்டார்.
கர்நாடக மாநிலத்தில் 4 முறை எம்.பி.யாக இருந்தவர் ஹெச்.ஜி. ராமுலு. அவரது மகள் விஷ்ணுவந்தனா(47). அவர் தனது கணவர் ரவிக்குமாருடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது கணவருடன் பெங்களூர் வந்தார். விஷ்ணுவந்தனா, ரவிக்குமார் மற்றும் உறவினர் டாலி ஆகிய 3 பேர் கடந்த திங்கட்கிழமை ஜெயநகரில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு வந்த ஒரு தம்பதி விஷ்ணுவந்தனாவிடம் தனியாகச் பேச வேண்டும் என்று கூறி அவரை அழைத்துச் சென்றனர். ஆனால் நெடு நேரமாகியும் அவரைக் காணவில்லை. அதன் பிறகே அவர் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து விஷ்ணுவந்தனாவை கடத்தியவர்கள் டாலி மற்றும் ரவிக்குமாருக்கு போன் செய்து ரூ.35 லட்சம் பணம் கொடுத்தால் மட்டுமே அவரை விடுவிப்போம் என்று கூறியுள்ளனர்.
உடனே இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் கடத்தல்காரர்கள் விஷ்ணுவந்தனாவை சென்னைக்கு தான் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சென்னை சென்றனர். நேற்று சென்னை ரயில் நிலையத்தி்ல் தனியாக நின்று கொண்டிருந்த விஷ்ணுவந்தனாவை போலீசார் மீட்டு பெங்களூருக்கு அழைத்து வந்தனர்.
அவர் எதற்காக கடத்தப்பட்டார், கடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை. விஷ்ணுவந்தனாவிடம் விசாரித்த பிறகு தான் அது தெரிய வரும். இதற்கிடையே பண விவகாரம் காரணமாக யாராவது உறவுக்காரர்கள் கடத்தியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications