சீரியஸாக களமிறங்கிய சிபிசிஐடி.. வெள்ளத்துரையை தட்டித் தூக்க தீவிரம்! ஜஸ்டின் வீட்டுக்குள் போன மெஷின்
சென்னை: பழநி கோவில் நில மோசடி வழக்கு தொடர்பாக, கோவை மாவட்டம் மடத்துக்குளத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் நிலத்தை வாங்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள வெள்ளைத்துரை மாயமாகியுள்ள நிலையில், தீவிரமாக அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே திண்டுக்கல்லில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டுக்குள் ஸ்கேனர் - பிர்ண்டரை போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ₹100 கோடி மதிப்பிலான நிலம், முறைகேடாக வெறும் ₹2 கோடிக்கு பதிவு செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் நிலத்தை கிரையம் பெற்றவர்களில் ஒருவராகக் கூறப்படும் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளைத்துரை (52) என்பவரின் வீட்டில் சனிக்கிழமை காலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
சிபிசிஐடி
கோவையைச் சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. காவல் ஆய்வாளர் கேசவன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் மூன்று கார்கள் மூலம் வந்து, வெள்ளைத்துரையின் வீட்டில் பல மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது நிலப் பதிவு தொடர்பான ஆவணங்கள், சொத்து விவரங்கள் மற்றும் வழக்கு விசாரணைக்கு தேவையான முக்கிய ஆதாரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளைத்துரை
வெள்ளைத்துரை கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரைக் கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பழநி கோவிலுக்கு சொந்தமான உயர்மதிப்புள்ள நிலம் குறைந்த விலைக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கு மாநிலம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்கேனர் - பிர்ண்டர்
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களிடமும் விசாரணை நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மடத்துக்குளம் பகுதியில் நடைபெற்ற இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே திண்டுக்கல்லில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டுக்குள் ஸ்கேனர் - பிர்ண்டரை போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.
ஜஸ்டின் மணிகண்டன்
அந்த வகையில் நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் இன்று காலை முதல் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அவர் வீட்டில் இல்லாத நிலையில் மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி இருக்கலாம் என சொல்லப்படும் நிலையில் போலீசார் ஸ்கேனர் பிரிண்டர் உள்ளிட்ட உபகரணங்களை எடுத்து வந்துள்ளனர். அதாவது வீட்டில் இருக்கும் ஆவணங்களை ஸ்கேன் செய்து அவற்றை டிஜிட்டல் ஆவணங்களாக சிபிசிஐடி போலீசார் மாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பழனி சார்பதிவாளர்
இது ஒருபுறம் இருக்க பழனி சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் சிபிசிஐடி எஸ்பி சஜிதா தலைமையில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நேரடியாகச் சென்று, அலுவலகக் கதவுகளைப் பூட்டி அங்கிருக்கும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சிபிசிஐடி எஸ்பி சஜிதா நேரடியாகப் பழனியில் களமிறங்கியுள்ளார். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் வெளிநபர்கள் யாரும் உள்ளே வராதவாறும், உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்லாதவாறும் சார்பதிவாளர் அலுவலகத்தின் முக்கியக் கதவுகள் அனைத்தும் அதிரடியாகப் பூட்டப்பட்டன.












Click it and Unblock the Notifications