மதசார்பின்மை பற்றி பேசி பிரதமர் பதவிக்கு நிதிஷ்குமார் குறி: லாலு
டெல்லி: பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்து அதிகாரத்தை அனுபவித்து வரும் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் மதசார்பற்றவர் கிடையாது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியை முன் நிறுத்தக் கூடாது, ஒரு மதசார்பற்றவர் வர வேண்டும் என்று பாஜகவுக்கு கண்டிசன் போட்டுள்ளார் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள நிதிஷ் குமார்.
இது குறித்து பிகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் கூறுகையில், மதவாத சக்திகளான பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் மடியில் உட்கார்ந்து ஆட்சி செய்யும் நிதிஷ்குமார் இப்படி பேச எந்த அருகதையும் இல்லை. பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரை எப்படி மதசார்பற்றவராகக் கருத முடியும்.
குஜராத்தில் கோத்ரா கலவரம் நடந்தபோது வாஜ்பாய் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்தவர் தான் நிதிஷ்குமார். ரயில் எரிப்பு குறித்து நியாயமான விசாரணைக்குக் கூட அவர் அப்போது உத்தரவிடவில்லை.
இப்போது தன்னை பிரதமர் பதவிக்கு முன் நிறுத்த நிதிஷ்குமார் முயல்கிறார். அதனால் தான் நரேந்திர மோடி குறித்தும் மதசார்பின்மை குறித்தும் பேச ஆரம்பித்துள்ளார் என்றார் லாலு.