லைசென்ஸ், நம்பர் பிளேட் இல்லை: ஒரே நாளில் 100 கார்கள், 250 பைக்குகள் பறிமுதல்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நேற்று போலீசார் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆவணங்கள் இல்லாத 100 கார்கள், 250 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் மானூர், நாங்குநேரி, ராதாபுரம், மூலக்கரைப்பட்டி, ஆலங்குளம், தேவர்குளம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக தொடர் வழிப்பறி சம்பவங்கள் மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து வாகன சோதனை நடத்தி ஓட்டுனர் உரிமம், ஆவணங்கள் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்யுமாறு போலீசாருக்கு நெல்லை எஸ்.பி. விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் வள்ளியூர், நாங்குநேரி, அம்பை, தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், சேரன்மகாதேவி, தாழையூத்து ஆகிய 8 டிவிஷன்களில் போலீசார் நேற்று தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் ஓட்டுனர் உரிமம், ஆவணங்கள் இல்லாத மற்றும் நம்பர் பிளேட் இல்லாத 100 கார்கள், 250 பைக்குகள் ஆகியவை பறி்முதல் செய்யப்பட்டன.