பாகிஸ்தான் பிரதமர் கிலானி பதவி பறிப்பு, புதிய பிரதமர் மக்தூம் சகாபுத்தீன்?

பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு கடநத் ஏப்ரல் மாதம் 26ம் தேதி வந்தது. அந்த நாளில் இருந்து அவர் பிரதமராக இருக்கும் தகுதியை இழந்துவிட்டார் என்று நேற்று தெரிவித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், இது குறித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு அந்நாட்டு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து கிலானியின் பிரதமர் பதவி பறிபோகிறது. இந்நிலையில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், அந்நாட்டு அதிபருமான ஆசிப் அலி சர்தாரியின் தலைமையில் இன்று அதிகாலை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட அவசரக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் மக்தூம் சகாபுத்தீனை அடுத்த பிரதமராக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய பிரதமரை தேர்வு செய்ய வசதியாக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபையை நாளை கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
புதிய பிரதமர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மதியம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிலானியின் பதவியை பறிக்கக் கூறிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து எதுவும் செய்ய வேண்டாம் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்கள் சர்தாரியை அறிவுறுத்தியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
சர்தாரி உள்பட பல தலைவர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கிலானி எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தான் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இறுதியில் பதவி பறிபோயுள்ளது என்பது குறி்ப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications