மகராஷ்டிரா தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ: 11 பேர் காயம், ஆதர்ஷ் ஊழல் ஆவணங்கள் நாசம்?
மும்பை: மும்பையில் உள்ள மகாராஷ்டிரா அரசு தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடத்தில் இருந்த 11 பேர் காயம் அடைந்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த ஆதர்ஷ் ஊழல் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
மும்பையில் உள்ள மகாராஷ்டிர அரசு தலைமைச் செயலகமான மந்த்ராலயாவில் உள்ள ஒரு கட்டிடத்தில் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு திடீர் என்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் 4வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தளத்தில் தான் ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் மற்றும் நக்ர்புற வளர்ச்சித் துறை சம்பந்தமான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.
அந்த கட்டிடத்தில் தான் முதல்வர், முக்கிய அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசு உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் உள்ளன. கட்டிடத்தின் 4வது தளத்தில் உள்ள பழங்குடியின மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பாபன்ராவின் அறையில் தான் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் தீ மள, மளவென பிற அறைகள், மற்றும் 5வது, 6வது தளங்களுக்கு பரவியது. தீ விபத்து ஏற்பட்டவுடன் 20 நிமிடங்களில் அந்த கட்டிடத்தில் இருந்த 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த உடன் 25 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தன. இந்த விபத்தால் அப்பகுதி கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இந்த விபத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 4வது, 5வது மற்றும் 6வது தளங்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்து ஏற்பட்டபோது கட்டிடத்திற்குள் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.