27ல் மதுரை ஆதீன மடத்தை குண்டு வைத்து தகர்ப்போம்: மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு
மதுரை: மதுரை ஆதீன மடத்தை வரும் 27ம் தேதி வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை ஆதீனம் அருணகிரி நாதர் என்றைக்கு அறிவித்தாரோ அதில் இருந்து பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நித்யானந்தா நியமனத்திற்கு பிற ஆதீனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மதுரை ஆதீனம் மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். என்ன போராட்டம் நடந்தாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் மதுரை மடத்தில் பூஜையும், அன்னதானமும் செய்து வருகிறார்கள் நித்யானந்தாவும், அருணகிரிநாதரும்.
இந்நிலையில் மதுரை ஆதீன மடத்துக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. வரும் 27ம் தேதி மடத்தை குண்டு வைத்து தகர்ப்போம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுப்புனர் பரிசுத்தராஜா, மதுரை ஆதீனம் மீட்பு குழு துணைத்தலைவர், சுப்பிரமணியபுரம், மதுரை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் செல்போன் எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் மதுரை அண்ணாநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தான் அனுப்பப்பட்டுள்ளது.
உடனே இது குறித்து மடத்தின் சார்பில் விளக்குத்தூண் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த விவகாமரம் குறித்து மதுரை ஆதீனம் கூறுகையில்,
இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவன் நான் அல்ல. எந்த அச்சுறுத்தலுக்கும் பணிய மாட்டேன். நித்யானந்தாவை இளைய ஆதீனமாக்கியதில் எந்தவித மாற்றமும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம். அந்த கடிதத்தை அனுப்பியவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை ஆதீன மடத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.