சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆஜர்- 26-ந் தேதி மீண்டும் விசாரணை!
புதுச்சேரி: காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 19 பேர் இன்று ஆஜராகினர்.
காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை முடிவைடந்த நிலையில் சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த்சர்மா ஆகியோர் சாட்சிகளிடம் மறுவிசாரணை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனு மீது கடந்த 15-ந் தேதி விசாரணை நடைபெற இருந்தது. ஆனால் பத்மாவின் வழக்கறிஞர் தமக்கு உடல்நலக் குறைவு என்று கூறியதால் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
இன்றைய விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 24 பேரில் 19 பேர் ஆஜராகி இருந்தனர். இதையடுத்து மறு விசாரணை கோரும் மனுவை ஆராய்ந்த நீதிபதி, மனுவை முறையாக தாக்கல் செய்யாததால் மீண்டும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் அரசு சிறப்பு வழக்கறிஞருடன் இணைந்து வாதாடுவதற்காக தனியே புதிய மனுவைத் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை 26-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.