தமிழக மீனவர்களை கைது செய்வேன் - ராஜபக்சேவின் பேச்சுக்கு நாராயணசாமி கண்டனம்
சென்னை: கச்சத்தீவுப் பகுதிக்கு வரும் தமிழக மீனவர்களை கைது செய்வோம் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பேசியுள்ளதற்கு மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியதாவது:
இந்திய மீனவர்களின் நலனில் பிரதமர் அதிக அக்கறை கொண்டு உள்ளார். இலங்கை அதிபர் 20 ஆண்டு சிறை தண்டனை என கூறி உள்ளது பற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
இது பற்றி பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் இலங்கை அரசுடன் பேசுவார். எதிர் காலத்தில் இந்திய மீனவர்கள் எந்தவித பாதிப்பின்றி இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். தமிழக மீனவர்களுக்கு இலங்கை ராணுவம் மற்றும் கடற்படையால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கை முள்ளிவாய்கால் போல் மேலும் பல முள்ளிவாய்கால் சம்பவம் நடக்கும் என இலங்கை அமைச்சர் பேசியது கண்டிக்கத்தக்கது. நாட்டின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் நிதானமாக பேச வேண்டும் என்றார்.
சிறுவாணி தடுப்பு அணை பிரச்சினையில் இரு மாநில அரசுகளும் செய்துக் கொண்ட ஒப்பந்த சரத்துகள் படி செயல்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நிலை. இதை இரு மாநில அரசுகளும் மீறக் கூடாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications