பிரணாப் முகர்ஜி 28-ந் தேதி மனு தாக்கல்!
அதற்கு முன் வரும் ஜூன் 26-ம் தேதி அவர் தனது நிதியமைச்சர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் பதவி விலகுகிறார்.
பிரதீபா பட்டீலின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க ஜுலை 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார்.
அவருக்கு இந்த கூட்டணியில் இடம் பெறாத முலாயம் சிங்கின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும், பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் ஆகிய இடதுசாரி கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.
பி.ஏ.சங்மா
பிரணாப் முகர்ஜியை எதிர்த்து பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார். இவருக்கு அ.தி.மு.க., நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் ஆகிய கட்சிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் ஆதரவு தெரிவித்து இருக்கிறது.
மேலும் சில கட்சிகளும் தன்னை ஆதரிக்கும் என்று பி.ஏ.சங்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மம்தா ஆதரிப்பாரா...
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருந்த போதிலும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவரது எதிர்ப்பையும் மீறி பிரணாப் முகர்ஜி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.
பிரணாப் முகர்ஜியை எதிர்க்கும் மம்தா பானர்ஜி, பி.ஏ.சங்மாவுக்கும் இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை. திரிணாமுல் காங்கிரசின் நிலை என்ன என்பதை அவர் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
28-ந் தேதி வேட்புமனு தாக்கல்
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு கடந்த 16-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 30-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜி 28-ந் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக பாராளுமன்ற விவகார மந்திரி பவன்குமார் பன்சால் நேற்று தெரிவித்தார். பிரணாப் முகர்ஜி சார்பில் 4 செட் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்றும், ஒவ்வொரு செட் மனுவையும் 50 பேர் (எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்) முன்மொழிவார்கள் என்றும், 50 பேர் வழிமொழிவார்கள் என்றும் அவர் கூறினார்.
26-ந் தேதி ராஜினாமா
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால், நிதியமைச்சர் பதவியை பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்கிறார். வருகிற 26-ந் தேதி அவர் நிதியமைச்சர் பதவியை விட்டு விலகுகிறார். பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர் கொடுப்பார்.
ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். இதேபோல் அந்த கட்சியின் தலைவர் சரத் யாதவையும் அவர் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.