விசிக ஆதரவு கொடுத்த அடுத்த நிமிடமே.. திருமாவளவனுக்கு போன் போட்ட விஜய்! நேரில் போவாரா?
சென்னை: பெரும்பான்மை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக விசிக இன்று ஆதரவு கடிதத்தினை வழங்கியுள்ளது. இதனால் தவெக தலைவர் விஜய் திருமாவளவனை செல்போனில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்துள்ளார். நேற்று கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்ததற்கு விஜய் நேரில் சென்று நன்றி கூறியது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்ற தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. 118 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என ஆளுநர் ஆர்லேகர் உறுதியாக உள்ளார். இதனால் ஆட்சி அமைக்க தேவைப்படும் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற தவெக கடுமையாக போராடியது.

சிபிஐ, சிபிஎம் ஆகிய 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது ஆதரவை அளித்துவிட்டன. ஆனால் விசிக நேற்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அறிவிப்பு வெளியாகவில்லை. இன்று காலை திருமாவளவன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விசிகவின் நிலைப்பாடு தொடர்ந்து தாமதம் ஆனது. திருமாவளவன் நேற்று இரவு ஸ்டாலினை சந்தித்தார்.
அதன்பிறகு பாதுகாப்பு வாகனங்கள் எதுவும் இன்றி தனியாக சென்னை நட்சத்திர விடுதிக்கு சென்றார். விசிக தலைமை அலுவலகத்தில் திருமாவளவன் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்திற்கு விஜய்யும் வர இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், இது எதுவுமே நடக்கவில்லை. திடீரென நட்சத்திர விடுதியில் வைத்து திருமாவளவனை தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சந்தித்தார்.
அப்போது தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் கடிதத்தை ஆதவ் அர்ஜுனா பெற்றுக்கொண்டார். இதையடுத்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர விஜய் தயாராகி வருகிறார். இதற்கிடையே, திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட விஜய் அவருக்கு ஆதரவு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். நேற்று கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்ற விஜய், ஆதரவு தெரிவித்ததற்கு நேரில் நன்றி கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளார் விஜய். விசிக அலுவலகத்தில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதால் விஜய்யும் அங்கு வரக்கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன. எனினும் ஆளுநரை சந்தித்துவிட்டு வருவாரா அல்லது அதற்கு முன்பு வருவாரா என்ற விவரங்கள் வெளியாகவில்லை.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் பெரும்பான்மை இப்போது 120 ஆக அதிகரித்துள்ளது. உடனே விஜய்யும் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறார். ஆளுநர் இன்று இரவு 7 மணிக்கு கேரளாவுக்கு செல்ல உள்ள நிலையில் விஜய் அதற்கு முன் சந்திக்க நேரம் அளிப்பாரா விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.














Click it and Unblock the Notifications