வந்ததும்.. வராததுமா! ஸ்டாலின் எடுக்கப் போகும் மிகப் பெரிய முடிவு! பாஜகவுடன் கூட்டணி? திடீர் ட்விஸ்ட்
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சியை இழந்த திமுக அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. கூட்டணியில் இருந்த முக்கிய கட்சிகளின் பெரும்பாலானவை வெளியேறிவிட்ட நிலையில் திமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போகிறது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த நிலையில் 2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஸ்டாலின் மிகப்பெரிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறார் என்கின்றனர். அது என்ன? என்பதுதான் தற்போதைய கேள்வி.
தமிழக அரசியலில் '2026' மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காரணம் தமிழக வெற்றிக்கழகத்தின் எழுச்சி. திமுக, அதிமுக என்ற இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி ஆளுங்கட்சியாக பொறுப்பு ஏற்று இருக்கிறது. எதிர்க்கட்சியாகவும் ஆளுங்கட்சியாகவும் இருந்த அதிமுகவும் திமுகவும் இன்று எதிர்க்கட்சி வரிசையில் ஒன்றாக அமர்ந்துள்ளன.
இதுதான் தமிழக அரசியலில் புதிய அத்யாயத்தை தொடங்கி வைத்திருக்கிறது. அதே நேரத்தில் ஆட்சியை இழந்தாலும் வலுவான எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆளுங் கட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பது, ஆலோசனை வழங்குவது என திமுக பரபரப்பாக இயங்கி வருகிறது.

தமிழக அரசியல்
அதே நேரத்தில் ஆட்சி கவிழும், ஆறு மாதத்தில் தேர்தல் என்பது போன்ற சில கருத்துக்கள் மட்டுமே திமுகவுக்கு எதிர்மறை விமர்சனங்களை பெற்று தந்திருக்கிறது. மேலும் புதிய அரசு செயல்பட குறைந்தபட்ச கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் திமுக கூட்டணியில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ், விடுதலை, சிறுத்தைகள், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என மிகப் பெரும் கூட்டணி பலத்துடன் இருந்த கூட்டணி உடைந்திருக்கிறது.
2029 மக்களவை தேர்தல்
விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தவெக பக்கம் சாய்ந்து விட்டன. இந்த சூழலில் 2029 மக்களவைத் தேர்தலை எதிர் கொள்ள திமுக தயாராகி வரும் நிலையில் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. தேசிய அரசியலை பொறுத்தவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இடையே தான் போட்டி இருக்கிறது.
மூன்றாவது அணி
கடந்த காலங்களில் அதாவது 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி என மூன்றாவது அணிகள் அமைந்திருந்தாலும் காங்கிரஸ் அல்லது பாஜகவின் ஆதரவு அந்த கூட்டணிகளுக்கு தேவைப்பட்டது. இதனால் தேசிய அரசியலில் மூன்றாவது அணிக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு வழங்கவில்லை என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை. இப்போதைக்கு திரிணாமுல் காங்கிரஸ், பிஆர்எஸ், ஆம் ஆத்மி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற மாநில கட்சிகள் தங்கள் மாநிலத்திலேயே பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.
திமுக கூட்டணி
எனவே திமுக இந்த கட்சிகளை ஒன்றிணைத்து தேசிய அளவில் மூன்றாவது கூட்டணி அமைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டதாக சொல்கின்றன. அதே நேரத்தில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் அத்தகைய வாய்ப்பு மிக குறைவாக இருப்பதாகவே அரசியல் பார்வையார்கள் சொல்கின்றனர்.
சிறுபான்மை மக்கள்
இன்னொரு காரணம் திமுகவின் முக்கியமான வாக்கு வங்கி. 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை இழந்தாலும் பல நகர்ப்புற மற்றும் சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது அல்லது வெற்றிக்கு அருகே சென்று இருக்கிறது. சென்னையில் பெரும்பாலான தொகுதிகளில் தோற்று இருந்தாலும், அங்கும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதிகளை திமுக தனது வாக்கு வங்கி தக்க வைத்திருக்கிறது.
முக ஸ்டாலின்
திராவிட அரசியல், மதச்சார்பற்ற கொள்கை, முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் திமுகவின் முக்கிய ஆதரவு வட்டமாக இருக்கின்றனர். இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது பாஜகவுடன் கூட்டணி அமைப்பது திமுகவுக்கு சாதகமாக இருக்காது என்பதால், பாஜக கூட்டணி வேண்டாம் என்ற முடிவை ஸ்டாலின் எடுத்திருப்பதாக சொல்கின்றனர்.
பெரிய முடிவு
2029 மக்களவைத் தேர்தல், வர இருக்கிற உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல 2031 சட்டமன்ற தேர்தலையும் கணக்கில் வைத்து தான் திமுக தலைமை செயல்படும். தற்போதைக்கு கூட்டணி கட்சிகள் விலகி இருப்பது தற்காலிகம் தான் என திமுக தலைமை நம்புகிறது. இதற்காக தேசிய அளவில் மூன்றாவது கூட்டணி பாஜகவுடன் கூட்டணி என்பதெல்லாம் கட்டுக்கதை என்றும் 2029 தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் மாறும் அப்போது ஸ்டாலின் மிகப்பெரிய முடிவை எடுப்பார் என்கின்றனர் திமுகவினர்.















Click it and Unblock the Notifications