“இப்போதைக்கு அமைச்சரவையில் விசிக சேரவில்லை.. திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும்”: வன்னி அரசு பேட்டி
சென்னை: தவெக ஆட்சியில் விசிக பங்கு பெறக்கூடும் என்ற யூகங்கள் பரவி வந்த நிலையில், நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளது விசிக. அமைச்சரவையில் பங்கேற்கப்போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வருங்காலத்தில் அமைச்சரவையில் பங்கேற்பது பற்றி பேசி முடிவு எடுக்கப்படும் என விசிக சட்டமன்றக் குழு தலைவர் வன்னி அரசு.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 34.92% வாக்குகள் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெகவிடம் 108 இடங்கள் மட்டுமே உள்ளன. அதிலும், விஜய் தான் போட்டியிட்டு வென்றுள்ள பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் ராஜினாமா செய்தால் தவெக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 107- ஆக குறையும்.

தவெக பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 11 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சி, திமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, தவெகவிற்கு ஆதரவு அளித்தது. இதன் மூலம், தவெகவின் ஆதரவு எண்ணிக்கை 112 ஆக அதிகரித்தது. அதைத்தொடர்ந்து, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்தன.
இன்னும் 2 எம்.எல்.ஏ-களின் ஆதரவு தேவை என்ற நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் ஆட்சியமைக்க தவெகவுக்கு விசிக ஆதரவளிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆதரவு கடிதத்தை விசிக தலைவர் திருமாவளவனிடம் இருந்து தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேரடியாக பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நேற்று இரவு ஆதரவு என தகவல்கள் வெளியான நிலையில் ஆதரவு அளிக்கவில்லை என ஐ.யூ.எம் எல் தெரிவித்திருந்த நிலையில் இன்று ஆதரவு அளித்துள்ளது. இதன் மூலம் ஆட்சி அமைக்க தவெகவுக்கான ஆதரவு 120 ஆக உயர்ந்துள்ளது.
தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வழங்கியுள்ள கடிதத்தில், "தமிழக மக்களுக்கு நிலையான, ஜனநாயக முறையிலான ஆட்சி கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் விசிக தனது 2 எம்எல்ஏக்களின் ஆதரவையும் தவெகவுக்கு எந்த நிபந்தனையும் இன்றி வழங்குகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாகப் பேசியுள்ள விசிக சட்டமன்றக் குழு தலைவர் வன்னியரசு, "தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்கவில்லை. வருங்காலத்தில் அமைச்சரவையில் பங்கேற்பது பற்றி பேசி முடிவு செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இடதுசாரிகள், ஆட்சியில் பங்கேற்பதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதால், அதையொட்டி நாங்களும் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும் என விரும்புகிறோம். எனது விருப்பம் மட்டுமின்றி அதுவே கட்சியினரின் விருப்பமும். திருமாவளவன் திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். திமுகவுடன் தோழமை தொடர்கிறது" என வன்னி அரசு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications