கேரளாவில் ஹோட்டல்களில் அதிகரித்து வரும் உணவுப் பண்ட விலையைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் வருகிறது
திருவனந்தபுரம்: கேரள ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்த கேரள அரசு புதிய சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை ஏற்று கேரள அரசும் இதற்கான சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி, கோழிக்கோடு உள்பட நகரங்களில் உள்ள ஹோட்டல்களில் உணவு பண்டங்களின் விலை மிக அதிகமாக இருப்பதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் கொச்சியை சேர்ந்த நுகர்வோர் அமைப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது.
அந்த அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கேரளாவின் முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்களில் இட்லி, தோசை, சப்பாத்தி உள்பட உணவு பண்டங்களுக்கு இஷ்டத்துக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஹோட்டல்களில் உணவு பண்டங்களின் விலையை கட்டுபடுத்த அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி கிரிஜெகன், ஹோட்டல்கள் இஷ்டத்துக்கு விலை நிர்ணயம் செய்வதை ஏற்க முடியாது. அத்திவாசிய பொருட்களின் விலை உயர்வு, கூலி உயர்வு போன்ற காரணங்கள் இருந்தாலும் தங்கள் இஷ்டத்துக்கு விலையை உயர்த்தி கொள்வதை அனுமதிக்க முடியாது. எனவே விலையை கட்டுபடுத்த கேரள அரசு புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என உத்தரவி்ட்டார்.
இதுபற்றி சட்டப்பேரவையில் கேட்கப்பட்ட கேள்விககு பதில் அளித்த முதல்வர் உம்மன்சாண்டி, ஹோட்டல்களில் விலையை கட்டுபடுத்த சட்டம் கொண்டு வரும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கதக்கது. இந்த உத்தரவின் அடிப்படையில் அடுத்த கூட்ட தொடரில் புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications