சிறை நிரப்பும் போராட்டமா, ஏம்ப்பா சொல்லவே இல்லை...அழகிரியின் 'அழகு'ப் பேச்சு!

சமீபத்தில் சென்னையில் திமுக செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதில் மு.க.அழகிரியைத் தவிர அத்தனை பேரும் கலந்து கொண்டனர். கட்சிக்காரர்களை அதிமுக அரசு பொய் வழக்குகள் போட்டு சிறையில் தள்ளுவது தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க கூட்டப்பட்ட கூட்டம் அது. ஆனால் அன்றைய தினம் தனது மதுரை பண்ணை இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் அழகிரி. இதன் காரணமாக அவரால் சென்னைக்கு வந்து கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது.
இந்த நிலையில் திடீரென சென்னைக்குக் கிளம்பி வந்தார் அழகிரி. அங்கு அவரை சூழ்ந்த செய்தியாளர்கள், திமுக அறிவித்துள்ள சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்வீர்களா என்று கேட்டனர்.
அதற்கு அழகிரி, இது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. மத்திய அமைச்சராக உள்ளதால் போராட்டத்தில் கலந்து கொள்ளலாமா என்பதை பற்றி தி.மு.க. தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் இதுகுறித்து இதுவரை எங்களுக்குச் சொல்லப்படவில்லை. அதை கேட்கத்தான் போய்க் கொண்டிருக்கிறேன் என்று வித்தியாசமாக பதிலளித்தார்.
சரி விலைவாசி உயர்வுதான் உர விலைக்குக் காரணமாமே என்று கேட்டபோது, இதெல்லாம் மீடியாக்கள் பரப்பும் தவறான தகவல் என்று கூறி விட்டு மேற்கொண்டு பேச மறுத்து விட்டு நகர்ந்து போனார் அழகிரி.
அழகிரியை இப்போதெல்லாம் அடிக்கடி விமான நிலையங்களில்தான் செய்தியாளர்கள் சந்தித்துப் பேச முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications