புதுசா கார் வாங்கி ஓட்டிப் பார்த்த பஞ்சாயத்து தலைவர் விபத்தில் சிக்கி பலி
நெல்லை: நெல்லையில் புதியதாக கார் வாங்கி அதற்கு கோவிலில் வைத்து பூஜைகள் முடித்த பிறகு ஓட்டிப் பார்த்த பஞ்சாயத்து தலைவர் விபத்தில் சிக்கி பலியானார்.
நெல்லை மாவட்டம் தென்காசிக்குட்பட்ட சுந்தராஜபுரத்தைச் சேர்ந்த கைக்கொண்டான் மகன் முருகையா(எ) வெற்றிவேல் முருகன்(47). பஞ்சாயத்து தலைவர். அவர் புதிதாக கார் ஒன்றை வாங்கினார். அதற்கு இன்னும் பதிவு எண் கூட வாங்கவில்லை. இந்நிலையில் காரை அக்காரையில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து பூஜை செய்து அதை பூக்களால் அலங்கரித்து அழகு பார்த்தார்.
அதன் பிறகு காரை ஓட்டிப் பார்க்க விரும்பியவர் அதில் ஏறி கிளம்பினார். ஆனால் கார் கோவில் சுவற்றில் மோதியது. இதில் முருகன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
புதிதாக கார் வாங்கி அதை முதன்முதலில் ஓட்டிப் பார்க்கையில் விபத்தில் சிக்கி பஞ்சாயத்து தலைவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.