2 இணையமைச்சர்களுடன் நிதித்துறையை கவனிக்கும் மன்மோகன் சிங்

ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளராக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து நேற்று தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சராக கூடுதல் பொறுப்பு ஏற்கிறார்.
நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில் நிதித்துறை பிரதமர் கட்டுப்பாட்டில் செல்கிறது. அவருக்கு உதவியாக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், நமோ நரைன் ஆகியோர் இணை நிதியமைச்சர்களாக தொடரவுள்ளார்கள்.
ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த மன்மோகன் சிங் கடந்த 1991ம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சியில் நிதியமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது அவர் பொருளாதார சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு குறைந்துள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்க உள்ளார்.
தொடர்ந்து அவரே இந்தத் துறையை வைத்திருப்பாரா அல்லது விரைவில் வேறொருவரிடம் ஒப்படைப்பாரா என்பது தெரியவில்லை.
அணு சக்தி, திட்டமிடல், விண்வெளி, பணியாளர் மற்றும் ஓய்வூதியம் ஆகிய துறைகள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications