விருதுநகரில் அதிமுக பெண் கவுன்சிலர், கணவர் வெட்டிக் கொலை
விருதுநகர்: விருதுநகரில் அதிமுக நகராட்சி கவுன்சிலர் தங்கபாண்டியம்மாள் மற்றும் அவரது கணவர் ஆகியோரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது.
விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் எஸ்.ஆர். நாகராஜன். அதிமுக நிர்வாகி. அவரது மனைவி தங்கபாண்டியம்மாள். விருதுநகர் நகராட்சி 21வது வார்டு கவுன்சிலர். இருவரும் நேற்று மாலை 6 மணிக்கு பைக்கில் விருதுநகர் தேசபந்து மைதானம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சுமோ கார் அவர்களின் பைக்கில் மோதுவது போல் வந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த நாகராஜன், தங்கபாண்டியமாள் இருவரும் கீழே இறங்கினர்.
அப்போது சுமோவில் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கொண்ட கும்பலும் காரில் இருந்து கீழே இறங்கியது. அவர்கள் நாகராஜன், தங்கபாண்டியம்மாள் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டினர். பின்னர் அக்கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றது. இதில் படுகாயமடைந்த கணவன், மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் ரோட்டில் கிடந்தனர். அப்பகுதி மக்கள் இருவரையும் மீ்ட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொணடு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாண்டியம்மாள் இறந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நாகராஜன் இறந்தார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.