சிறை நிரப்புவது எப்படி... ஆலோசனைக் கூட்டத்தையும் புறக்கணித்தார் அழகிரி!

நேற்று முன்தினம்தான், திமுகவின் கோஷ்டிப் பூசலை சிறை நிரப்பும் போராட்டம் சரி செய்து விடும் என்று திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று மதுரையில் கூட்டப்பட்ட திமுக ஆலோசனைக் கூட்டத்திற்கு அழகிரி வரவில்லை. இத்தனைக்கும் நேற்று அவர் மதுரையில்தான் இருந்தார்.
அதை விடமுக்கியமாக, மு.க.அழகிரிக்குச் சொந்தமான தயா கல்யாண மண்டபத்தில்தான் நிகழ்ச்சியும் நடந்தது. அழகிரியின் ஆதரவாளர்கள்தான் இந்தக் கூட்டத்தையும் கூட்டியிருந்தனர். அப்படியிருந்தும் அழகிரி வரவில்லை.
ஜூலை 4ம் தேதி நடைபெறுவதாக கட்சி செயற்குழு தீர்மானித்துள்ள சிறை நிரப்பும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்தான் இது.
கூட்டம் தொடங்கியதும் சில நிர்வாகிகள் அழகிரியைத் தொடர்பு கொண்டு கூட்டத்திற்கு வாங்கண்ணே என்று கூப்பிட்டார்களாம். ஆனால் அவரோ, நீங்க தொடர்ந்து நடத்துங்க, சிறை நிரப்பும் போராட்டத்தைப் பற்றி மட்டும் விவாதியுங்க,வேறு எதைப் பற்றியும் பேசக்கூடாது என்று அறிவுறுத்தலை மட்டும் பதிலாக கொடுத்தாராம்.
இதற்கிடையே, சிறை நிரப்பும் போராட்டத்திலும் கூட அழகிரி பங்கேற்க மாட்டார் என்று மதுரையிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அவர் போராட்டத்தைத் தவிர்க்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.
ஸ்டாலின் ஆதரவாளர்களும் தனி கூட்டம்
இதற்கிடையே, நேற்று இதே மதுரையில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களும் தனியாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தனர்.
மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராமன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்பெல்லாம், குறிப்பாக கடந்த திமுக ஆட்சியின்போது மதுரையில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் கூட்டம் என்பதையே பார்க்க முடியாது. ஆனால் தற்போது தனியாக கூட்டம் கூட்டியுள்ளதைப் பார்க்கும்போது மதுரையில் திமுக கோஷ்டிப் பூசல் உச்சகட்டத்தை எட்டி வருவதாக திமுகவினர் கவலையுடன் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications