ஆபாச படம் காட்டி செக்ஸ் கொடுமை: பாதிக்கப்பட்ட இளம்பெண் கலெக்டரிடம் புகார்
சேலம்: கணவன் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் ஆபாச படம் காட்டி செக்ஸ் கொடுமை செய்த 2 நபர்களின் மீது பாதிக்கப்பட்ட இளம்பெண், சேலம் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த வெள்ளாள குண்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(30). இவர் சேலம் லீ பஜார் பகுதியில் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளர். இவருக்கு சங்கீதா(27) என்ற மனைவியும், 2 மகனும், 2 மகளும் உள்ளனர்.
தினமும் அதிகாலையில் வேலைக்கு செல்லும் செல்வராஜ், இரவு தான் வீடு திரும்புவார். அப்போது சங்கீதா வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருப்பார். சங்கீதாவின் தனிமையை பயன்படுத்தி, அதே பகுதியை சேர்ந்த 2 பேர் தன்னிடம் செல்போனில் ஆபாச படத்தை காட்டி செக்ஸ் கொடுமை செய்வதாக சேலம் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து சங்கீதா அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
எனது கணவர் அதிகாலை நேரத்தில் வேலைக்காக சேலம் சென்றுவிடுவார். கடந்த வாரம் நான் எங்கள் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள டேங்கிற்கு தண்ணீர் பிடிக்க சென்றேன்.
அப்போது எங்கள் பகுதியை சேர்ந்த 2 பேர் குடிபோதையில் என்னிடம் வந்து உன் கணவர் மெசேஜ் அனுப்பி உள்ளார் என்று கூறி செல்போனை காட்டினர். ஆனால் செல்போனில் ஆபாச படம் ஓடினது. இதனை கண்ட நான் அவர்களை திட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றுவிட்டேன்.
இரவில் வேலை முடித்து வீடு திரும்பிய கணவரிடம், நடந்த சம்பவங்களை தெரிவித்தேன். இந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த என்னிடம் மீண்டும் ஆபாச வீடியோ காட்டி, செக்ஸ் கொடுமை செய்தனர்.
இது குறித்து எனது கணவர் தட்டி கேட்ட போது, எங்கள் இருவரையும் அவர்கள் தாக்கினர். இதையடுத்து வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றோம். நடந்த சம்பவங்களை போலீசாரிடம் கூறிய போது, அவர்களை விசாரிப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் வீட்டில் தனிமையில் இருந்த எனக்கு மீண்டும் செக்ஸ் கொடுமை கொடுக்கின்றனர்.
இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எனக்கு செக்ஸ் கொடுமை அளிக்கும் அந்த 2 நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க, சங்கீதா தனது கணவன், குழந்தைகள் உடன் வந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.