தாய்லாந்தில் டூரிஸ்ட் பஸ் மின் கம்பத்தில் மோதி 2 இந்தியர்கள் உள்பட 10 பேர் பலி
பாங்காக்: தாய்லாந்தின் கோ பாங்கன் தீவுக்கு சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 இந்தியர்கள் உள்பட 10 பேர் பலியாகினர், 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 24 சுற்றுலாப்பயணிகள் மற்றும் 3 பணியாட்களுடன் பேருந்து ஒன்று கோ பாங்கன் தீவுக்கு நேற்றிரவு 7.30 மணிக்கு புறப்பட்டது. அந்த பேருந்து இன்று அதிகாலை 5.30 மணி அளவில் தாகியான் தாங்கில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருக்கையில் பேருந்து நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த பெரிய மின் கம்பத்தில் மோதியது. பேருந்து மோதிய வேகத்தில் அந்த மின் கம்பம் பேருந்தின் மீதே விழுந்தது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர், 2 இந்தியர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் பேருந்தின் முன் பக்கம் உள்ள வலது டயர் வெடித்ததால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் வேகமாக மோதியது என்று தெரிய வந்துள்ளது என்று எம்சிஓடி ஆன்லைன் செய்திகள் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications