2ஜி- கனிமொழி, தயாளு அம்மாளை கைது செய்ய முகாந்திரம் உள்ளது: அமலாக்கப்பிரிவு

2ஜி வழக்கு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு முன்பு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் இருந்து 2ஜி உரிமம் பெற்ற டிபி குரூப் நிறுவனம், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி மற்றும் மகள் கனிமொழி பங்குதாரர்களாக உள்ள கலைஞர் டிவிக்கு ரூ.223.55 கோடி பணம் கொடுத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ரூ. 200 கோடி பணம் முறைகேடாக கருணாநிதி குடும்பத்தினரால் பெறப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் கனிமொழி, தயாளு அம்மாள் ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது.
அதேபோல, மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்து முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனின் குடும்பத்தாருக்கு சொந்தமான சன் டைரக்ட் டிவி லிமிடெட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது பற்றியும் விசாரணை நடத்தினோம்.
இந்த விவகாரத்தில், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஏர்செல் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து அந்த நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்க நிர்ப்பந்தப்படுத்தியுள்ளார். நிறுவனம் கைமாறிய பிறகே ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வழங்கியுள்ளார். மேலும், அதன் பின்னர் மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ.549.96 கோடி பணத்தை முதலீடு செய்துள்ளது.
இதுகுறித்தும் சிபிஐ துணையுடன் விசாரணை நடத்தினோம். கடந்த மே மாதம் மலேசியாவில் விசாரணை நடத்தப்பட்டது. அது குறித்து மலேசிய அதிகாரிகளிடம் இருந்து மேலும் சில தகவல்கள் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
ஜேபிசி விசாரணையின்போது, சில உறுப்பினர்கள், 2ஜி ஊழல் வழக்கை அமலாக்கப்பிரிவினர் மெதுவாக விசாரணை நடத்துவததாக குற்றம் சாட்டினர்.
சாட்சிகள் பட்டியலில் வாஜ்பாய், ப.சிதம்பரம்
இதற்கிடையே 2ஜி ஊழல் வழக்கில் தயாரிக்கப்பட்டுள்ள சாட்சிகள் பட்டியலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் பெயர்களை சேர்த்துள்ளனர்.
ஆனால், சாட்சிப் பட்டியலில் வாஜ்பாயின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஜேபிசி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடுத்த சந்திப்பின்போது ஆஜராகுமாறு 2ஜி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் தொலைத்தொடர்புத்துறை செயலாளர் சித்தார் பெகுராவுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications