அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது!
சேலம்: ஒன்றாவது வகுப்பு படிக்கும் தனது மகளின் பள்ளிக்குச் சென்ற ஒரு அதிமுக பிரமுகர், அவளது வகுப்பு ஆசிரியையுடன் வாக்குவாதம் செய்து செருப்பால் அடித்து விட்டார். இதைப் பார்த்து ஆவேசமடைந்த ஆசிரியர்கள் அத்தனை பேரும் அவரை சூழ்ந்து கொண்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் செந்தாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இதே பள்ளியில்27 வயதான இவரது மனைவி சுகன்யாவும் ஆசிரியையாக உள்ளார்.
நேற்று இப்பள்ளிக்கு உள்ளூர் அதிமுக பிரமுகர் சின்னத்துரை என்பவர் தனது மகளுடன் வந்தார். சின்னத்துரையின் மகள் சுகன்யாவின் வகுப்பில் ஒன்றாவது படித்து வருகிறாள்.
நேற்று மதியம் பள்ளிக்கு வந்த சின்னத்துரை, ஆசிரியை சுகன்யாவை சந்தித்து, ஏன் அடிக்கடி லீவு போடுகிறீர்கள். இப்படி லீவு போட்டால், என் குழந்தைக்கு யார் பாடம் சொல்லித் தருவது என்று கேட்டுள்ளார். அதற்கு ஆசிரியை சுகன்யா பதிலளித்துள்ளார். அப்போது திடீரென ஆசிரியை சுகன்யாவை செருப்பால் அடித்து விட்டார் சின்னத்துரை.
இதனால் அங்கு பரபபரப்பு ஏற்பட்டது. அத்தனை ஆசிரியர்களும், மாணவர்களும், அங்கு திரண்டனர். சினத்துரையை சுற்றிச் சூழ்ந்து கொண்டனர். அவர் தப்பி விடாமல் அத்தனை பேரும் ஆவேசமாக சூழ்ந்து நின்றனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் போனது.
போலீஸார் விரைந்து வந்து சின்னத்துரையைக் கைது செய்தனர். அவர் குடித்து விட்டு வந்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர் மீது, ஆசிரியையை பணி செய்ய விடாமல் தடுத்தது, அசிங்கமாக பேசியது, செருப்பால் அடித்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டுள்ளது.
பின்னர் அவரை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீஸார்.












Click it and Unblock the Notifications