மணல் கொள்ளையை தடுத்தால் குண்டர் சட்டத்தில் கைது: மிரட்டும் அதிகாரிகள்- கலெக்டரிடம் பெண் கதறல்
வேலூர்: மணல் கொள்ளையை தடுத்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என்று அதிகாரிகள் மிரட்டுவதாக வேலூர் மாவட்ட கலெக்டரிடம் பெண் ஒருவர் கதறி கண்ணீர் விட்டு மனு அளித்தார்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கர் கணேஷ். டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர். அவரது மனைவி கீதா தனது கைக்குழந்தையுடன் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
வாலாஜாவை அடுத்த சாத்தம்பாக்கம் பகுதியில் உள்ள பாலாற்றில் தமிழக அரசு மணல் குவாரி உள்ளது. அங்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளும், மணல் யார்டு நடத்தும் பழனிச்சாமியும் கூட்டுச் சேர்ந்து கொண்டு மணல் கொள்ளை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேட்டால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
இதனைத் தடுக்க எனது கணவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளும், கனிமவள அதிகாரிகளும், பழனிச்சாமியும் எங்கள் வீட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை உனது கணவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லை எனில், உனது கணவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்போம் என்றும், குடும்பத்தையே ஒழித்து விடுவோம் என்றும் மிரட்டி வருகின்றனர். இதற்கு காவல்துறை அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.
அவர்கள் கூறியபடியே எனது கணவர் சங்கர் கணேஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி பொய் வழக்குகளை போட்டுள்ளனர். எனவே, சட்ட விரோதமாக செயல்படும் அதிகாரிகள் மீதும், அவர்களுக்கு துணை போகும் போலீஸ் அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னையும், எனது கணவர் உயிரையும் தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் அஜய் யாதவ் இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் மணல் கடத்தலை தடுத்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என்று அதிகாரிகள் மிரட்டுகின்றார்களாம்.












Click it and Unblock the Notifications