கல்வி உரிமை சட்டம்: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்ய ராமதாஸ் கோரிக்கை
சென்னை: கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகள் இட ஒதுக்கீடு வழங்க மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபட் செய்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய 25 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தங்கள் குழந்தைகளுக்கு சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகள் இடம் ஒதுக்க மறுத்துவிட்டதை எதிர்த்து சில பெற்றோர்கள் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்ததற்கு தமிழக அரசின் பொறுப்பின்மையும், அக்கறை இன்மையுமே காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் இவ்வழக்கில் அரசின் சார்பில் வாதிட தலைமை வழக்கறிஞரையோ அல்லது உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒருவரையோ அனுப்பியிருக்க வேண்டும். அவ்வாறு அனுப்பி இருந்தால் நீதிமன்றம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு விடை அளித்திருக்கலாம்.
தனியார் பள்ளிகள், தற்போது உயர்நீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பை பயன்படுத்தி கொண்டு, இனிவரும் காலங்களில் கல்விபெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்த மறுக்கும் வாய்ப்புள்ளது. இந்த ஆபத்தை தடுப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த மனுவின் மீதான விசாரணையின் போது உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்து, ஏழை குழந்தைகளின் கல்விபெறும் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications