பாளை சிறையில் 2,000 திமுகவினரை அடைக்க ஏற்பாடு
நெல்லை: சிறை நிரப்பும் போராட்டத்தில் கைதாகும் சுமார் 2,000 திமுகவினரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
திமுகவினர் மீது பொய் வழக்குகளை போட்டு கைது செய்யும் அதிமுக அரசைக் கண்டித்தும், காவல் துறையின் நடவடிக்கையை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடக்கிறது.
இதையடுத்து திமுகவினரை கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறையினரும், சிறை துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது இங்கு 3 மாவட்டங்களைச் சேர்ந்த 1,375 கைதிகள் உள்ளனர்.
இது தவிர 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகளும், ஆயுள் தண்டனை கைதிகளும் இருக்கின்றனர். இன்று மறியலில் கைதாகும் திமுகவினரை வெளிச்சிறையில் அடைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். பாளையங்கோட்டை சிறையில் கைதிகளை சோதனை செய்யவும், கண்காணிக்கவும் சிறப்பு கமாண்டோ படையினர் 60 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலும் திமுகவினரை அடைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. பாளையங்கோட்டை சிறையில் 2,000 பேர் வரை அடைப்பதற்கு ஏற்பாடு நடந்து வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.