சித்தப்பா முறை வருபவருடன் ஓடிய பெண்... இருவரையும் ஊருக்கு வரவழைத்துக் கொன்ற கொடூரம்!
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சித்தப்பா உறவு வரும் நபருடன் வீட்டை விட்டு ஓடிப் போனார் இளம் பெண். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன், அவர்கள் இருவரையும் நைச்சியமாக பேசி ஊருக்கு வரவழைத்து அடித்துக் கொன்று விட்டார்.
வேதாரண்யம் அருகே உள்ளது வாய்மேடு, சேனாதிக்காடு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் 19 வயதான கரிஷ்மா. ஆதனூரைச் சேர்ந்தவர் சுதாகர். இவருக்கு வயது 21. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், கரிஷ்மாவுக்கு, சுதாகர் சித்தப்பா முறை வருமாம்.
சமீபத்தில் கரிஷ்மாவின் குடும்பம், சுதாகர் குடும்பம் வசித்து வந்த சேனாதிக்காடுக்கு இடம் பெயர்ந்தது. அப்போது கரிஷ்மாவுக்கும், சுதாகருக்கும் இடையே உறவு முறையை மீறி காதல் மலர்ந்து விட்டது. இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர்.
கடந்த ஒரு வருடமாக இந்தக் காதல் நீடித்துள்ளது. இந்த நிலையில் காதல் விவகாரம் வெளியே தெரிய, இரு குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைந்தனர். தவறான உறவு இது என்று அவர்கள் கண்டித்துள்ளனர். மேலும் இருவரும் சந்தித்துக் கொள்ளவும் தடைகள் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் கரிஷ்மாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த சுதாகர், ஜூன் 28ம் தேதி கரிஷ்மாவை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவர்கள் குறித்தத் தகவல் இல்லை. இந்த நிலையில் கரிஷ்மாவின் அண்ணன் தங்கவேலைத் தொடர்பு கொண்ட சுதாகர், உங்கள் தங்கை கர்ப்பமாக இருக்கிறாள் என்று கூறியுள்ளார். மேலும் காதலை ஏற்று தங்களை வாழ அனுமதிக்குமாறும் கோரியுள்ளார்.
இதையடுத்து நீங்கள் முதலில் ஊருக்கு வாருங்கள் பேசலாம் என்று தங்கவேல் கூறியுள்ளார். இதையடுத்து காதல் ஜோடி மகிழ்ச்சி அடைந்தது. திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு தியேட்டருக்குப் போய் படம் பார்த்த அவர்கள் பின்னர் சேனாதிகாடுக்கு வந்தனர்.
ஊருக்கு வந்தவர்கள் தங்கவேல் வழியிலேயே சந்தித்து தனது வீட்டுக்கு அருகே உள்ள ஒரு தோட்டப் பகுதியில் அமர வைத்துப் பேசினார். அப்போது அவருடைய நண்பரான சசிக்குமார் என்பவரும் உடன் இருந்தார். அந்த சமயத்தில் திடீரென சுதாகருடன் வாக்குவாதத்தில் இறங்கினார் தங்கவேல். பின்னர் திடீரென கீழே கிடந்த இரும்புக் குழாயை எடுத்து சரமாரியாக தாக்கத் தொடங்கினார். அவருடன் சசிக்குமாரும் சேர்ந்து சுதாகரை அடித்தார். இதைப் பார்த்து அதிர்ந்து போன கரிஷ்மா தடுக்க முயன்றார். அப்போது அவரையும் தங்கவேல், சசிக்குமார் அடித்தனர். இருவரையும் மாறி மாறித் தாக்கியதில் இருவருமே பரிதாபமாக இறந்து போயினர்.
இந்த படுகொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகொலையைச் செய்து விட்டுத் தப்பி ஓடிய தங்கவேலும், சசிக்குமாரும் பின்னர் வாய்மேடு போலீஸில் சரணடைந்தனர். அவர்களைக் கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.