சிங்கள ராணுவத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பாவிட்டால், நாங்கள் அனுப்புவோம்: திருமா எச்சரிக்கை
சென்னை: தமிழகம் வந்துள்ள சிங்கள ராணுவத்தை மத்திய அரசு உடனே திருப்பி அனுப்பாவிட்டால் அவர்களை விடுதலைச் சிறு்ததைகள் கட்சி திருப்பி அனுப்பும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிங்கள இனவெறி அரசின் இராணுவத்தினருக்கு சென்னை தாம்பரத்தில், இராணுவ தொழில்நுட்பப் பயிற்சி அளிக்க இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிப்பதோடு, சிங்கள இராணுவத்தினரை உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியள்ளதாவது,
கடந்த 2009 மே மாதம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் போரில் தமிழின மக்களை லட்சக் கணக்கில் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசுக்கு தொடர்ச்சியாக இந்திய அரசு துணை போவது தமிழினத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.
போரின்போது சிங்கள இனவெறி அரசுக்கு இந்தியா பல்வேறு வகைகளில் உதவி செய்துள்ளது. ஒரு மாபெரும் இன அழிப்பை செய்து சர்வதேச போர்க் குற்றவாளி என அனைத்துலக நாடுகளின் கண்டனத்துக்குள்ளாகியுள்ள சிங்கள அரசின் ராணுவத்தினருக்கு இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் ராணுவப் பயிற்சி அளிப்பதற்கு இந்திய அரசு அனுமதித்திருக்கிறது.
மேலும் இலங்கையிலிருந்து தமிழகம் வருபவர்கள் குறித்த தகவல்களை தமிழக அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஏற்கனவே சுட்டிக்காட்டியும் கூட தமிழக அரசுக்குத் தெரிவிக்காமல், தமிழகத்தில் சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க இந்திய அரசு அனுமதி அளித்திருப்பது, தமிழக மக்களுக்கும், தமிழக அரசுக்கும் விரோதமான இந்திய அரசின் போக்கையும், தமிழக அரசையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்திய அரசின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
முள்வேலி முகாம்களில் தமிழர்கள் மீதான அடக்குமுறை, தமிழகத்தில் சந்தேகத்தின் பேரில் சிறப்பு முகாம்களில் ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்படும் கொடுமை, தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் என தொடர்ந்து தமிழினத்திற்கு எதிராகச் செயல்படும் இந்திய அரசின் போக்கை கண்டிக்கிறோம்.
ராணுவப் பயிற்சிக்காக தமிழகம் வந்துள்ள சிங்கள ராணுவத்தினரை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் இல்லையேல் விடுதலைச் சிறுத்தைகள் அவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று எச்சரிக்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.