கொலுசை மீட்கச் சென்ற பெண்ணைக் கற்பழித்தாரா கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர்?
சென்னை: தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த பெண்ணை, கடமலைக்குண்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரது 3 வயது மகன் கண் முன்பாகவே இந்த கொடூரம் நடந்துள்ளதாகவும் பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது.
பெரியகுளத்தை சேர்ந்தவர் சுகந்தி. இவர் கடமலைக்குண்டு காவல் நிலைய இன்ஸ்பெகட்ர் குறித்து மாநில டிஜிபி அலுவலகத்தில் பரபரப்புப் புகார் கொடுத்துள்ளார்.
அதில், நான் கடந்த பிப்ரவரி மாதம் கடமலைக்குண்டு மலைப்பகுதியில் உள்ள எனது தாய் வீட்டுக்கு சென்றேன். அடகு வைத்த எனது கொலுசை மீட்பதற்காக பையில் பணத்துடன்,கடமலைக்குண்டு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 போலீஸ்காரர்கள் உன் மீது சந்தேகம் இருக்கிறது எனக்கூறி என்னை அழைத்துச் சென்றனர்.
போலீஸ் நிலையத்தில் அன்று இரவு தங்க வைத்தனர். அப்போது போலீஸ் நிலையத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர், பாலியல் தொந்தரவு செய்து என்னை கற்பழித்தார். போலீஸ் நிலையத்தில் வைத்து என்னை இன்ஸ்பெக்டர் கற்பழித்தபோது, எனது 3 வயது மகன் அழுது கொண்டிருந்தான். ஆனால், போலீசார் அதனை கண்டு கொள்ளவில்லை.
மறுநாள், திருட்டு வழக்கில் செய்யாத குற்றத்துக்காக என்னை சிறையில் அடைத்தனர். நிலக்கோட்டை சிறையில் 23 நாட்கள் அடைக்கப்பட்டிருந்த நான் நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆனேன்.
தினமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்துப்போட வந்த என்னை போலீஸ்காரர் ஒருவர் மிரட்டினார். போலீஸ் நிலையத்தில் நடந்ததை யாரிடமாவது சொன்னால் நீ வெளியே வர முடியாத அளவுக்கு வழக்குகளை போட்டு சிறையில் அடைத்து விடுவோம் என்று கூறினார்.
போலீசார் தாக்கியதில் எனக்கு காயமும் ஏற்பட்டது. மறுநாள் மருத்துவனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த பின்னர்தான் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். எனவே சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மகன் முன்பாகவே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தன்னைக் கற்பழித்ததாக கூறியுள்ள பெரியகுளம் பெண்ணின் இந்தப் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications