மகான்களின் அதிஷ்டானங்கள், சமாதிகளை அரசு கையகப்படுத்தக் கூடாது: இந்து முன்னணி
சென்னை: மகான்களின் அதிஷ்டானங்கள், சமாதிகளை தமிழக அரசு கையகப்படுத்தக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இந்து முன்னணியின் நிறுவனர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவில்களை அரசு எடுத்துக் கொண்டபின் பல்லாயிரக்கணக்கான கோடிக்கு ஊழல் நடந்துவருகிறது. ஆலய அறங்காவலர்களாக அரசியல்வாதிகளையோ, அரசியல்வாதிகளுக்கு வேண்டியவர்களையோ நியமிப்பதும், அவர்கள் கோவிலின் மாண்புகளைக் குலைப்பதும் பக்தர்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளது.
கோவில்களில் ஆகம விதிகளுக்குப் புறம்பாக பல காரியங்கள் நடைபெற்று வந்துள்ளன. ஓதுவார் மூர்த்திகள், வாத்யக்காரர்கள் மற்றும் பணியாளர்கள் முதலானோர் பலர் கோவில்களில் கிடையாது. சில பெரிய கோவில்களைத் தவிர மற்றவற்றில் பூஜை செய்பவரைத் தவிர வேறு யாரும் கூட நியமிக்கப்படவில்லை; ஆனால் தக்கார் மட்டும் உண்டு.
எந்த ஒரு கோவிலுக்கும் சொத்தோ, வருமானமோ இல்லாமல் இல்லை. தற்போது மகான்களின் சமாதிகளையும், அதிஷ்டானங்களையும் அரசு எடுப்பதாக அறிவித்துள்ளது, இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனை அரசு திரும்பப் பெற வேண்டும். இந்துக்களின் மீது மட்டும் ஏன் பாரபட்ச நடவடிக்கை? மகான்களின் அதிஷ்டானத்தை கையில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதுபோன்ற நடவடிக்கைகள் இந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயல். மகான்களின் அதிஷ்டானங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு அவர்களின் பக்தர்களால் முறைப்படியான வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது பக்தர்களால் ஏற்படுத்தப்பட்டது, இதில் அரசு தலையிட எந்தக் காரணமும் இல்லை.
இத்தகைய போக்கை எதிர்த்து மடாதிபதிகள், ஆதினகர்த்தர்கள், இந்துத் துறவிகள் தங்களது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். இன்று நாம் மவுனமாக இருந்துவிட்டால், அரசின் பிடியில் ஆலயங்கள் சீரழிவதைப்போல, ஆலயச் சொத்துகளை அரசுத் துறையெனும் முதலைகள் விழுங்குவதைப்போல அதிஷ்டானங்களில் மகான்களின் சமாதிக்காக 6 அடி நிலத்தை மட்டும் விட்டு விட்டு மற்றவற்றைக் கபளீகரம் செய்துவிடுவர். மகான்களின் அதிஷ்டானங்கள், சமாதிகளை எடுப்பதை அரசு கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று அதில் ராமகோபாலன் கூறியுள்ளார்.