சென்னை ஓ.எம்.ஆர். ரோடு சூப்பர் மார்க்கெட்டில் தீ: ரூ.2 கோடி நாசம்
சென்னை: ஒக்கியம்பேட்டை ஓ.எம்.ஆர். ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 2 கோடி மதி்ப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் அருகே உள்ள ஒக்கியம்பேட்டை ஓ.எம்.ஆர். ரோட்டில் சேகர் என்பவர் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். சூப்பர் மார்க்கெட்டுக்கு பின்புறம் அவரது வீடு உள்ளது. நேற்று இரவு சூப்பர் மார்க்கெட்டை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் அவரது சூப்பர் மார்க்கெட்டில் திடீர் என்று தீப்பிடித்தது.
சூப்பர் மார்க்கெட்டில் இருந்து கரும்புகை வருவதைப் பார்த்தவர்கள் உடனே சேகருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். அவர் பதறியடித்து வந்து பார்த்தார். பின்னர் திருவான்மியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் தேனாம்பேட்டை, கிண்டி, திருவான்மியூரில் இருந்து 6 வண்டிகளில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. மின்கசிவால் தான் விபத்து ஏற்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தால் ஓ.எம்.ஆர். ரோட்டில் சுமார் ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.